2024 மே 09, வியாழக்கிழமை

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நேற்றைய தினம் (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவிய மழை உடனான காலநிலையின் பின்னர், டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவித்தார்.

கடந்த வருடத்தைவிட, இந்த வருடத்தின் கடந்த வாரம் வரை, டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரம் வரை 133 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென்று அறிக்கையிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் காணப்படுவதாகக் கூறிய அவர், அதன் அடிப்படையிலேயே, சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பிலும் ஆராய்ந்து இருந்தோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கிணங்க, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பதாகத் தெரிவித்த அவர், அதன் பிரகாரம், டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி, அந்த வாரம் யாழ்ப்பாண குடாநாடு பூராகவும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

அதனடிப்படையில், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் உள்ள உள்ளுராட்சி மன்றத்தினர், சுகாதார வைத்திய அதிகாரியினர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானித்து இருக்கின்றோம் எனவும், அவர் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X