2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வட மாகாண மீனவர்களால் மாபெரும் முற்றுகைப் போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 25 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

கடற்றொழில் அமைச்சரின் யாழ். மாவட்ட அலுவலகத்தை முடக்கி, வடக்கு மாகாண மீனவர்களால்,  நாளை (26) முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த வடமாகாண மீனவர்கள், இலங்கை - இந்தியா மீனவர்களது பிரச்சினைகள் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், வாய்மூலமான உறுதி மொழியும் காலத்தைக் கடத்தும் செயற்பாடுகளும் தான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டுமெனத் தெரிவித்த மீனவர்கள். தங்களது வாழ்வாதாரங்கள் அல்லது வலிகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், வடக்கின் நான்கு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ அமைப்புகள் இணைந்து  கலந்துரையாடலொன்றை நடத்தியதாகவும் அதன் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினர்.

எனவே, அரசியல் பிரமுகர்கள், ஓட்டோ சங்கம், பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் என அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென, வடமாகாண மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தை, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஆகியன இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .