-நவரத்தினம் கபில்நாத்
வடமாகாணசபைத் தேர்தலின் பின்னர் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலொன்று மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாந்தை கிழக்கு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாகாணசபை தேர்தலின்போது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிற்கு மாகாணசபை பிரதிநிதி இல்லாமையும் அதன்பின்னர் மாகாணசபை அமைச்சர்கள் சம்மந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் ஏற்பட்ட இழுபறிகள் சம்மந்தமாக வெளிவந்தவண்ணமிருக்கும் செய்திகள் ஊடாக இப்பிரதேச மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு கருத்து தெரிவித்திருந்த பிரதேச சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், பொதுமக்களின் கருத்துக்களை தலைமைப்பீடத்திற்கும் தலைமைப்பீடத்தின் கருத்துக்களை மக்களுக்கும் தெரியப்படுத்த முடியாத நிலையில் இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதோடு இவ்வாறான நிலைமை தொடர்ந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் எமது பதவிகளை இராஜினாமா செய்வது பற்றியும் சிந்திப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டு காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கருத்தில் எடுத்து அக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.