2025 ஜூன் 28, சனிக்கிழமை

முத்தையன் கட்டுக் குளத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

George   / 2015 ஜூன் 19 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு குளத்தின் கட்டுமான வேலைகள் 600 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேற்படி திட்டத்தின் சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட கள இணைப்பாளர் வி.ரவி, வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை அரசாங்கத்தால் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள அணைப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தின் கீழ் இந்தக் குளத்தின் கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முத்தையன்கட்டு குளமானது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்து தருமாறு பல்வேறு தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தத் திட்டத்தின் மூலம் குள அணையின் பாதுகாப்பை அதிகரித்து, சிறந்த குளமொன்று விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

முத்தையன்கட்டுக் குளம் 1966ஆம் ஆண்டில் மீள கட்டமைக்கப்பட்ட குடியேற்றத்திட்ட குளமாகும். இதில் 4,150 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பரவல் நீர்ப்பாசனம் மூலமாகவும் மேலதிகமாக 1,962 ஏக்கர் நிலப்பரப்புக்கு ஏற்று நீர்ப்பாசனம் மூலமும் நீர் பாய்ச்சப்படுகின்றது.

இக்குடியேற்றத்திட்டமானது முழுவதும் உப உணவு செய்கைக்காக வடிவமைக்கப்பட்டது. ஏறத்தாழ 50 வருடங்களின் பின்னர் குளக்கட்டும் அதனுடன் இணைந்த துருசுகள், குள கட்டுபாதைகள், பாலம், கலிங்கு பாதை என்பன மேம்படுத்தப்படுவதுடன் கலிங்கு 2 அடி உயர்த்தப்படவும், இரு வான் கதவுகளிற்கு மேலதிகமாக இரு வான்கதவுகள் பொருத்தப்படவும் திட்டத்தினால் நிதியுதவியளிக்கப்படுவதுடன் இதற்காக அணைப்பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தினால் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலதிகமாக 2000 ஏக்கர் நீர்ப்பாசனம் செய்யக்கூடியளவு நீர் தேக்கப்படமுடியும். கட்டுமான வேலைகள் 1 ½ வருடங்களுக்குள் முடிவடையும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .