2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

படையினர்வசம் காணிகள் இருப்பதால் மீள்குடியேற்றம் தடைபடுகிறது: மு.சந்திரகுமார்

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் ஆளுகையில் இருப்பதால் அம்மக்கள் மீள்குடியேற முடியாதுள்ளனர். அவற்றை விடுவிக்கும் எண்ணம் படையினரிடமிருந்திருப்பின் கடந்த 5 வருடங்களில் விடுவித்திருக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'கரைச்சி பிரதேசத்தில் 180 வரையான குடும்பங்களின் காணிகளில் 11 இராணுவ முகாம்கள்  அமைந்துள்ளதால் அவர்களின் மீள்குடியேற்றம் சாத்தியப்படவில்லை. இதேபோன்று கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களின் காணிகள் மற்றும் வீடுகளை படையினர் ஆளுகைக்குட்படுத்தியுள்ளமையினால் அம்மக்களின் மீள்குடியேற்றமும் தடைப்பட்டுள்ளது.

பூநகரிப் பிரதேசத்தில் இரணைதீவு எனும் பகுதியில் 380 குடும்பங்களின் நிலங்கள் கடற்படையினரின் ஆளுகைக்குள் இருப்பதனால் அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றமும் தடைப்பட்டுள்ளது.

கரைச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேசங்களில் இராணுவம் குடியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக அடுத்தவரும் சில நாட்களில் பரிசீலித்து சாத்தியமான பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் உரிய இடங்களுக்கு அறிவிக்கப்படும் என படை அதிகாரிகளால் இன்றைய (புதன்கிழமை) கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் ஆளுகையில் இருக்கும் நிலங்கள் மற்றும் முகாம்கள் தொடர்பான விபரங்கள்; இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியாத விடயம் அல்ல. அவர்கள் திட்டமிட்டு காலத்தை இழுத்தடிக்கும் நோக்கின் அடிப்படையிலேயே முகாம்களின் அமைவிடம் தொடர்பாக ஆராய்வது பற்றி குறிப்பிடுகின்றார்கள். மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் படையினருக்கு இருந்திருக்குமாயின் கடந்த ஐந்து வருடங்களில் விடுவித்திருக்க முடியும் என்று கூறினார்.

இக்காணிகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அந்த காணிகளுக்குரிய மக்களின் மீள்குடியேற்றம் சாத்தியப்படும் என்ற விடயத்தை நாம் வலியுறுத்தியிருக்கின்றோம். பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாதுள்ளனர். அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் கலோரஸ்ட் எனும் நிறுவனம் சுமார் 50 பணியாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

இங்கு மிகப்பரந்த பிரதேசமும் மிகச்செறிவாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாலும் இந்த மிகக்குறைந்த ஆளணியினருடன் பணிகளை முன்னெடுப்பதென்பது சாத்தியமற்றது. இந்நிலை தொடருமானால் அடுத்தவரும் பத்து வருடங்களைக் கடந்தாலும் அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி முடிவடைவதற்கு வாய்ப்பில்லை.  எனவே கண்ணிவெடி அகற்றும்  பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதற்காக கலோரஸ்ட் நிறுவனத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட அனுபவம் வாய்ந்த 750 வரையான பணியாளர்களும் மீள இணைத்துக் கொள்ளப்பட்டு செயற்பாடுகள் தொடர வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதனூடகவே இது சாத்திமாகும் என்றார்.

மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கான காணி ஆவணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன எனவே அவர்களுக்கும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதனையும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள போதும் இன்னும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது ஆகவே அவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.

இன்றைய கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கலந்துரையாடலாக மட்டும் அமைந்ததே தவிர, தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படவில்லை. தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலை எதிர்கௌ;ளும் காலம்.

அதுமட்டுமன்றி படையினரால் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே ஒரு உறுதித்தன்மையான அரசு அமையும் போதுதான் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை எட்ட முடியும் என நாம் நம்புகின்றோம்.  

கண்டாவளையில் நாதன் திட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டுவரும் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை போன்று அப்பிரதேச செயலர் பிரிவில் மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும்  காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அதற்கமைவாக உழவனூர், புன்னைநீராவி, பரந்தன் சிவபுரம் போன்ற கிராமங்களிலும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் மத்திய காணி ஆணையாளர் நாயகத்தின் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நடவடிக்கையில் சட்டபூர்வமாக காணிகளை சுவீகரிப்பதற்கும் அதனை அங்கு குடியிருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் உரிமை கோருபவர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்குமான அங்கீகாரம் வழங்கப்பட்டு செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு கவனம் வெலுத்த வேண்டும்' என சந்திரகுமார் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .