2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அதிபர்கள் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரீட்சைகள் நெருங்கி வரும் வேளையில் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படுவது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கி அவர்களை அமைதியான மனநிலையில் தேர்வுக்கு தோற்ற முடியாத நிலை ஏற்படும் என கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஒரு சில பாடசாலைகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை செயலாளரால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில 1ஏ.பி, 1சி தர பாடசாலை அதிபர்கள்; இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேர்வுகள் நெருங்கிவரும் சமயத்தில் இவ் இடமாற்றங்கள் செய்யப்பட்டமையால் பெற்றோர் விசனமும், கவலையும் அடைந்துள்ளனர். மாணவர்கள் அமைதியான மனநிலையில் தேர்வுக்கு தோற்றமுடியாத நிலை தோன்றியுள்ளது.

மேலும், 1 ஏ.பி, 1சி தர பாடசாலைகளுக்கு அதிபர் சேவைத் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த அதிபர்கள் நியமிக்கப்படுவதாயின் அனைத்து 1ஏ.பி, 1சி பாடசாலைகளுக்கும் சமநேரத்தில் அதிபர்களின் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திரு.அ.பங்கயற்செல்வனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையால் மாணவரிடையே அமைதியின்மை ஏற்பட்டதுடன், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. அதிபர் திரு.அ.பங்கயற்செல்வன் இப்பாடசாலைக்கு வழங்கிய அர்ப்பணிப்பான சேவை கணக்கிடப்படாமல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதி வித்தியாலய சமூகத்தால் விரும்பப்பட்ட அதிபர் திரு.பெ.கணேசன் இடமாற்றம் செய்யப்பட்டமையால் சமூக ரீதியான பாகுபாடு காட்டப்படுவதான உணர்வு பெற்றோரிடையே மேலோங்கியுள்ளது.

அதேசமயம், அதிபர் சேவைத் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த சில அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலை வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலையாத வகையில் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பொருத்தமான அதிபர் நியமிக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடு சுமூகமாக நடைபெற வழிசெய்தல், புனித திரேசா பெண்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த திருமதி. ஜெயந்தி தனபாலசிங்கத்தை வலயக் கல்வி அலுவலகத்தில் பொருத்தமான பதவியில் அமர்த்துதல். அ.பங்கயற்செல்வன், திரு.பெ.கணேசன் ஆகிய அதிபர்களின் சேவையை மதித்து பொருத்தமான பாடசாலைகளில் அதிபராக இடமாற்றம் செய்தல், நியமனம் வழங்கப்படாத மாவட்டத்தில் உள்ள அதிபர் தரம் 'ஐ' ஐச் சேர்ந்த அதிபர்களை பொருத்தமான பாடசாலைகளில் நியமித்தல், ஆகியவற்றைச் செய்வதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள், சீர்குலைந்துள்ள கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என கருதுகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழு  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி அதிபர்கள் சங்கம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .