2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிபொருள் கோரி மன்னாரில் இருவேறு போராட்டங்கள்

Princiya Dixci   / 2022 ஜூலை 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் எரிபொருள் கோரி இன்று (05) காலை முதல் மன்னார் தனியார் பஸ் சங்கத்தினர் மற்றும் ஓட்டோ சாரதிகளால் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட இருவேறு போராட்டங்கள் காரணமாக மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டனர்.

அரச போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்க முடியாத வகையில், தனியார் பஸ் உரிமையாளர்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தை மேற்கொள்ள காத்திருந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட 13,200 லீற்றர் டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பஸ்களுக்கும் வழங்குமாறு, உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழங்கப்பட்ட 13,200 லீற்றர் டீசலில் தற்போது வரை 2,413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தனியார் பஸ் சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே, இன்று (05) காலை முதல் தனியார் பஸ்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு, அரச போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ள முடியாது வீதியை மறித்தனர்.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில், அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (05) காலை 10 மணியளவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இதன்போது மன்னார் சாலைக்கு 6,600 லீட்டர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2,500 லீட்டர் டீசலையும் 13,200 லீட்டர் டீசல் வருமாக இருந்தால் 5,000 லீட்டர் டீசலையும் தனியார் பஸ்களுக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பஸ் சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை மன்னாரில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளும் தமக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .