2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நன்மையான திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது’

Niroshini   / 2021 ஜூலை 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

 

வெற்றுப் பூச்சாண்டிகளால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாதெனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துகள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் கூறினார்.

கௌதாரிமுனையில் இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் பண்ணையை, இன்று (14)  பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம், தமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென்றும், அதன் அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவுசெய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

2016, 2017ஆம் ஆண்டு காலப் பகுதியில், அப்போதைய அரசாங்கத்திடம்  அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் பண்ணையை கௌதாரிமுனையில் அமைத்த இலங்கை - சீனக் கூட்டு நிறுவனம், இதற்கு தேவையான சட்டரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், டக்ளஸ் தெரிவித்தார்.

'கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.

'எனவே, நாரா - நக்டா - கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டுக்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவிதத் அவர், இவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேனெவும் கூறினார்..

இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தால் நாட்டினுள் செயற்பட அனுமதியளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு பண்ணையை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றதெனத் தெரிவித்த டக்ளஸ், 'இது தொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி, எமது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என்றும் கூறினார்.

மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .