2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீன் விற்றவருக்கு அழைப்பாணை: இடையூறு செய்தவருக்கு பிடியாணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

சமைத்து உண்பதற்கு உகந்ததல்லாத மீனை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வியாபாரியை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் ஒருவரை கைது செய்யுமாறும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த வாரம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையில் மீன் விற்பனை செய்யும் வியாபாரியொருவர் சமைத்து உண்பதற்கு உகந்ததல்லாத மீன் ஒன்றை,  'சுறா' மீன் என ஒரு கிலோ கிராம், நூறு ரூபாய்க்கு வீடு வீடாகச் சென்று விற்பனை செய்துள்ளார்.

குறித்த மீன் வியாபாரியிடமிருந்து மின் கொள்வனவு செய்து சமைத்து உண்டவர்களில் ஆறு பேர்,  வயிற்றோற்றத்தால் பாதிக்கப்பட்டு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

மீன் வியாபாரியிடமிருந்து கொள்வனவு செய்த மீனை சமைத்து உட்கொண்ட பின்னரே, இவ்வாறு வயிற்றோற்றம்  ஏற்பட்டதாக, புதுக்குடியிப்பு பொது சுகாதார பரிசோகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து புதுக்குடியிருப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவர், பொதுச் சந்தையில் மீன் விற்பனை செய்யும் குறித்த வியாபாரியிடம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றுள்ளனர்.

இதன்போது, தான் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்யவில்லை என வாதிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பழுதடைந்த மீனை விற்பனை செய்தார் என சந்தேகிக்கப்படும் குறித்த மீன் வியாபாரிக்கு அருகிலிருந்த மற்றுமொரு மீன் வியாபாரி, விசாரணைகளுக்காக சென்ற பொது சுகாதார பரிசோகதகர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

இவர்களுக்கெதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .