2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

தூதுவர்களுடன் த.தே.பே கலந்துரையாடல்

R.Tharaniya   / 2025 மே 15 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதி படுத்த சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக்கோரி  தமிழ் தேசிய பேரவையினருக்கும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்புக்கள் புதன்கிழமை (14) அன்று கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் குறித்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

சந்திப்புகளை தொடர்ந்து தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாறு தனது கருத்தை பதிவு செய்தார். இன்று தமிழ்த் தேசிய பேரவையின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் உள்ள தூதுவராலயங்களை சந்தித்து விசேடமாக மூன்று அவசர விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தோம்.

முதலாவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக்கையும் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் கலாநிதி பாண்டே வுடன் சந்திப்பு இடம்பெற்றது மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி மகான்ரே பிறஞ்சேயுடன் இடம்பெற்றது.

 தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் அவரது இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் வவுனியா தவிர்ந்த நான்கு மாவட்டங்களில் சுமார் 6000 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம்.

மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரித்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டினை அரசு மீள பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.  வடகிழக்கு மக்கள் யுத்த காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும் போர் அழிவுகள் காரணமாகவும்   பெருமளவு மக்களுக்கு சொந்தமான காணி ஆவணங்கள் சொத்துக்களை இழக்க வேண்டி ஏற்பட்டது.

அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள்.ஆகவே ஆவணங்களை உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது.  இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட எமது ஈழ தமிழர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகாரமின்றி வாழ்கின்றனர் அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்பட போவதுமில்லை. 

இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்திய தூதுவரையும் சந்தித்தோம்  இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலம் நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்ப்பதல்ல. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக  சுவீகரிப்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.  ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்க வேண்டும்.

என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற விட்டத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படல் வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இரண்டாவது விடயம் குருந்தூர்மலை இல் தொல்பொருள் திணைக்களத்தின் க்குச்  சொந்தமான  79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக  325 ஏக்கர் காணியை விகாரைக்குரிய புத்த பிக்கு கோரியிருந்தார்.  ஆனால் அக்காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதல்ல என்ற அடிப்படையிலும் அப்பகுதியில் பெருமளவு விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு மறுக்கப்பட்டிருந்தது.

எனினும் பிக்குவும் தொல்பொருள் திணைக்களத்தினர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சொந்தக் காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருவரையும் கைது செய்து  உழவு இயந்திரத்தையும் நீதிமன்றில் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூறியிருந்தார். இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்வு எட்டபட்ட பின்னர் அத்தீர்மானத்தை யும் மீறி  இன்றும் கூட அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்பிடி தடையும் விதிக்கப்பட்டுள்ளது

விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையும் விதித்து விவசாயம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விடயத்தில் தலையிட்டு ஜனாதிபதி ரணில் இணங்கியவாறு குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் திணைக்களம் விடுவிக்கவும் பிக்குவின் அடாவடியை கட்டுப்படுத்தவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மூன்றாவது விடயமாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் . சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னும் அந்த காணிகளின் உரிமையாளர்கள் இடம் வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருள் உடன் தொடர்பு அற்றது  சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்ற  வேண்டும் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தும் மைய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா என்பன இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் பங்கு இருப்பதால் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி இடமும் இவ்விடயத்தில் அவரது தலையீட்டை வலியுறுத்தியுள்ளோம் - என்றார்.

நிதர்சன் வினோத்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .