2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

முல்லை மண்ணின் வீரத்தை மீண்டும் நினைவு படுத்தியுள்ளனர்; ரவிகரன் எம்.பி பாராட்டு

Editorial   / 2025 ஜூலை 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், அண்மையில் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையேயான ஜூடோ, மல்யுத்தம், டைக்குவாண்டோ தற்காப்புக்கலைகளில் 30பதங்கங்களை சுவீகரித்திருந்தனர்.

இதன்மூலம் விநாயகபுரம் பாடசாலை மாணவர்கள், உலகறிந்த முல்லை மண்ணின் வீரத்தை மீண்டுமொரு தடவை நினைவு படுத்தி உள்ளது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 17.07.2025 நேற்று இடம்பெற்றது. இக்குட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணப் பாடசாலை களுக்கிடையே வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஜூடோ, மல்யுத்தம், டைக்குவாண்டோ தற்காப்புக் கலைகளில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 30 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில் சாதனைபடைத்த மாணவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்திற்கு, துணுக்காய் கல்வி வலயத்திற்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விநாயகபுரம் பாடசாலை மாணவர்கள் எமது மாவட்டத்திற்கும், மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்தோடு எமது முல்லைமண் வீரம் செறிந்த மண், ஒரு காலத்தில் எமது வீரத்தை உலகிற்கு காட்டியிருக்கின்றோம். அந்த வீரத்தை மீண்டும் நினைவு படுத்தும் விதத்தில் எமது மாணவச் செல்வங்கள் தற்காப்புக் கலைகளில் சாதித்துக் காட்டியிருக்கின்றனர்.

வளப்பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை என பலவிதத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தப் பாடசாலை காணப்படுகின்றது. இருப்பினும் அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுனர்களின் முறையான வழிகாட்டுதல், மாணவர்களின் திடமான மன உறுதி என்பவற்றால் இந்த சாதனை சாத்தியமாகியிருக்கிறது.

இதற்கு முன்னரும் இந்த பாடசாலை இவ்வாறான தற்காப்புக் கலைகளில் சாதனை படைத்திருந்தது. நானும் நேரடியாகச் சென்று அந்த மாணவர்களையும், அதிபர், ஆசிரியர்களையும், பயிற்றுனரையும் பாராட்டியதுடன், பாடசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் பார்வையிட்டேன். இந்த பாடசாலையின் வளப்பற்றாக்குறைகள், ஆளணிப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X