2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன.

குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும்.

இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர்.

ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது.

படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .