2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘இரத்தத்தில் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 16 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எங்கள் பிள்ளைகளின் தியாகங்களிலும் அவர்களின் இரத்தத்திலும் அரசியல் செய்துதான் இந்த அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர். ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் விடுதலை தொடர்பில் எவரும் அக்கறை செலுத்துவதில்லை” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் அதைவிட இறுதி யுத்தம் இடம்பெற்று முடிந்த பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த, அவர்களின் கைகளால் ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளின் உரிய பதில் எதுவும் கிடைக்காமல் அவர்கள் உயிருடன் உள்ளனரா? அல்லது இல்லையா? அல்லது என்ன நடந்தது என்ற உரிய பதில்கள் எதுவுமே கிடைக்காமல் அவர்களது உறவுகள், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தேடி அலைந்து போராடி வருகின்றனர். இவற்றை விட, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, வீதியில் இறங்கி, தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நாட்கள், வாரங்கள், மாதங்கள் எனக் கடந்து, 147 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள், அடிக்கும் வெயில், இயற்கையின் தாக்கங்கள், இதைவிட இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள், அரசியல்வாதிகளின் விசமத்தனமான கருத்துகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தங்களுடைய ஆதங்கங்களை நேற்றுக் (16) கொட்டித் தீர்த்தனர்.

“நாங்கள் போரட்டத்தை ஆரம்பித்தமையானது, நாங்கள், எங்கள் உறவுகள் தொடர்பில் உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில், ஐ.நாவின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியபோது, அதன் கவனத்தை ஈர்க்கும் முகமாக இந்தப் போராட்டத்தை தொடங்கியிருந்தோம். இந்நிலையில், தமிழர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லும் அரசியல் தலைமைகள், எங்களுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் செய்யாது, இலங்கைக்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தை கொடுத்து விட்டு வந்துவிட்டார்கள் 

இதற்குப் பின்னர், இந்த அரசியல் தலைமைகள், நாங்கள் இலங்கைக்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தைக் கொடுத்து விட்டோம். ஆகவே, எங்கள் உறவுகள் தொடர்பில் வேறு வழிகளில் அழுத்தங்களைக் கொடுப்போம். இந்தப் போராட்டத்தை இடைநிறுத்துவோம் என்று எவரும் கூறவில்லை. நாங்கள் நான்கு மாதங்களாக இந்த இடத்தில் இருந்து போராடி வருகின்றோம்.

எங்கள் பிள்ளைகளின் தியாகங்களையும் அவர்களின் குருதிகளையும் பயன்படுத்தி அரசியல் செய்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று இன்று அரசியல் செய்கின்றனர். சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். ஆனால், நாங்கள் இன்று உண்ண உணவின்றி, உறக்கமன்றி பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .