Freelancer / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘‘தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும். நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மேகதாது திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை பற்றி விவாதிக்க முடியும்’’ என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14ஆவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக பொதுப் பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அங்கு உரையாற்றிய சந்தீப் சக்சேனா, ‘‘கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஓகஸ்ட் மாதம் வரை நிலுவையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகா முறைப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மட்டுமல்ல, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் அவமதிக்கும் செயல்.
தமிழகத்துக்கு 37.3 டிஎம்சி நீரை கர்நாடகா இன்னும் வழங்க வேண்டியுள்ளது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் நிலுவையில் உள்ள நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல ஒக்டோபரில் வழங்க வேண்டிய 20 டிஎம்சி நீரையும் முறையாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் கர்நாடக அரசு உடனடியாக நீரை திறக்க உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தியதை அடுத்தே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .