Editorial / 2026 மே 17 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ட்ரெஸ்ஸா மிடில்டனுக்கு இப்போது வயது 32. அவர் இன்னமும் ஒரு இளம் பெண்ணாகவே இருக்கிறார், ஆனால் அவர் அப்படி உணரவில்லை. "எனது வயதை விடவும் நான் மிகவும் முதுமையடைந்துவிட்டதாக உணர்கிறேன். ஒரு வயதான மூதாட்டியைப் போலவே நான் உணர்கிறேன்," என்கிறார் அவர். ஒன்பது வயதிற்குட்பட்ட நான்கு குழந்தைகளை வளர்க்கும் எந்தவொரு தாயையும் போல அவரும் மிகுந்த களைப்புடன் காணப்படுகிறார்.
அவரது கைகளில் இருக்கும் குழந்தைக்கு இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகின்றன. மற்றைய பெண் குழந்தைகளுக்கு முறையே எட்டு, நான்கு மற்றும் இரண்டு வயதுகள். தூக்கமில்லாத இரவுகள், நீச்சல் வகுப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைச் சீர் செய்தல் என ஒரு சாதாரணத் தாயின் அன்றாடப் பணிகளைப் பற்றி அவர் பேசுகிறார். ஆனால், ட்ரெஸ்ஸா மிடில்டன் ஒரு சாதாரணத் தாய் அல்ல.
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானிய வரலாற்றிலேயே மிக இளவயதுத் தாய் என்ற பெயருடன் அவர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். 2006 ஜூன் மாதம் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவருக்கு வயது வெறும் 12 மாத்திரமே. 11 வயதில் அவர் கர்ப்பமான அந்தச் செய்தி, அன்றைய காலப்பகுதியில் பிரித்தானியாவின் சமூகக் கட்டமைப்பு குறித்த பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 'அன்னி' (Annie) என்று அழைக்கப்பட்ட அந்த முதல் குழந்தை, பின்னர் தத்தெடுக்கப்பட்டது.
அந்தக் காலத்தில், ஒரு விருந்தில் மது அருந்தியதால் அவர் கர்ப்பமானதாகவே செய்திகள் வெளியாகின. ஆனால், 2010ஆம் ஆண்டு வெளியான ஒரு பேட்டியின் மூலமே அந்த அதிர்ச்சியான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு வயதிலிருந்து தனது சொந்த அண்ணன் ஜேசனாலேயே (Jason) அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தார். அந்தக் குழந்தை அவனுடையதே என்பதும் தெரியவந்தது. இதற்காக ஜேசன் 2009இல் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
தனது இளமைப் பருவத்தில் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைக்கும் நிலையில் இருந்த ட்ரெஸ்ஸா, தனது பிள்ளைகளுக்காக அந்தப் பாதாளத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். "2016ஆம் ஆண்டு நான் மீண்டும் கர்ப்பமானதை அறிந்தபோது, போதைப் பழக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டேன். நான் ஒரு தாயாக இருக்கவே விரும்பினேன். சமூக சேவைப் பிரிவினர் எனது குழந்தையை மீண்டும் என்னிடமிருந்து பறிக்க நான் எந்த இடமும் கொடுக்க விரும்பவில்லை," என அவர் உறுதியுடன் கூறுகிறார்.
தற்போது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அவர், தனது உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலைக் கருத்திற்கொண்டு, இனிப் பிள்ளைகள் வேண்டாம் என்ற முடிவில் கருத்தடை செய்துகொண்டுள்ளார். மிகவும் இளம் வயதில் கர்ப்பமானதால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்புகளை அவர் இன்னமும் எதிர்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago