2026 மார்ச் 28, சனிக்கிழமை

கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்

Freelancer   / 2024 ஜூன் 24 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா 

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து பிரதேச மக்கள் 92வது நாளாக போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

ஆனால், திங்கட்கிழமை  (24)  போராட்ட வடிவத்தை மாற்றி,செயலகத்தை மூடி, வீதிகளை மறித்து ஆக்ரோஷமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றாக செயலிழந்தது.பிரதேச செயலகம் இயங்கவில்லை. நகரில் ஒருவித பதட்டம் நிலவியது.

“கல்முனை வடக்கு பிரதேய செயலக உரிமைகளை திட்டமிடப்பட்டு ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது, அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது போராட்டம் தொடரும்” என மக்கள் தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்ததுடன், கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியையும் முற்றுகையிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் தமிழ்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் , பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன்,சீனித்தம்பி யோகேஸ்வரன் பா.அரியநேத்திரன் மற்றும் காரைதீவு முன்னாள் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  வடக்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்,பொதுமக்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளும் கலந்து கொண்டனர்.  

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 90 நாட்களாகியும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, ஸ்தலத்துக்கு வருகை தராமை பலத்த விசனத்தை ஏற்படுத்தியது. 

 களத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரடியாக தொடர்பு கொண்டு அவருடன் பேசினார். இருப்பினும் அவர் வருகை தரவில்லை.

இந்நிலையில்,  உயர் அதிகாரிகளும் அரசாங்கமும் எமக்குத் தீர்வை தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.

தொடர்ந்து, 1993 இது அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றனர்.  இதனை எதிர்த்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

நிர்வாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை பறிப்பது  நீதிமன்றை அவமானப்படுத்தும் செயலாகும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கல்முனையில் தெரிவித்தார்.

இங்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இதுவரை அவர் இந்த பக்கமே தலையைக் காட்டவில்லை. ஒரு கூட்டத்தையும் கூட்டவில்லை. இது எந்த நாட்டில் உள்ள சட்டம் ? இதுவொரு பச்சைப் பாரபட்சம், நீதி இல்லையா? இவ்வாறும் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பினார். 

சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்..

“அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நிரந்தரமாக வாழும் தமிழ் மக்களை நிரந்தரமாக துரத்தி அடிப்பதற்கு இன்னொரு சமூகம் கையாளுகின்ற யுக்தி போன்று இதனை  நாங்கள் பார்க்கின்றோம்.
முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் உள்ள நிர்வாக அலகான பிரதேச செயலகம் செயற்படக் கூடாது என்பதில் ஏனிந்த கொலைவெறி என்றும் கேள்வியெழுப்பினார்.  

அந்த பிரதேசத்திற்கான அதிகாரங்களை பறிப்பதற்கு பலரும் முயற்சி செய்கின்றார்கள். குறிப்பாக  கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் .
இங்குள்ள பிரதேச செயலாளர் சுமூகமாக சுதந்திரமாக தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். 

இங்கு 300 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகிறார்கள் .ஆனால் அதன் அதிகாரங்களை பறிப்பதற்கு மறைமுகமாக அதிகார பயங்கரவாதத்தை திணிக்கிறார்கள். இலங்கை நீதியின் படி, தர்மத்தின் படி, சட்ட நியாயாதிபதி ஓர் அமைதியான தீர்வை இந்த மக்கள் வேண்டுகின்றார்கள்.
 ஒரு பொறுப்புள்ள தமிழ்க்கட்சி என்ற அடிப்படையிலே நாங்கள் சமாதானமாக, சட்டரீதியாக இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். அது வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .