2026 மே 04, திங்கட்கிழமை

கோட்டையை ஆளப்போவது யார்: வேடசந்தூர் சொல்லும் ராசி

Editorial   / 2026 மே 03 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும், 'பெல்வெதர்' (Bellwether) தொகுதியாகக் கருதப்படும் வேடசந்தூர் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சியே அரியணை ஏறும் என்பது கடந்த 60 ஆண்டுகால வரலாறாகும். இந்தச் சுவாரசியமான உண்மை 2026 தேர்தலிலும் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை (மே 04) காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளன. அனைத்து முன்னிலை நிலவரங்களும் படிப்படியாக அறிவிக்கப்பட இருக்கின்றன. கட்சித் தலைவர்களின் தொகுதிகள், நட்சத்திரத் தொகுதிகள் எனப் பல இருந்தாலும், ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்று நோக்கும் ஒரே தொகுதியாக வேடசந்தூர் மாறியுள்ளது.

பெல்வெதர் தொகுதி என்றால் என்ன?

'Bellwether' என்ற ஆங்கிலச் சொல்லானது ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஆட்டுக்குட்டியைக் குறிக்கும். அதேபோல, ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் தொகுதி 'பெல்வெதர் சட்டமன்றத் தொகுதி' என அழைக்கப்படுகிறது.

அதாவது, இத்தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்தக் கட்சியே மாநில அளவில் ஆட்சியைக் கைப்பற்றும். கடந்த 60 ஆண்டுகளாக வேடசந்தூரில் வெற்றி பெறும் நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியே கோட்டையைப் பிடித்துள்ளது.

வரலாற்றுச் சான்றுகள்:

  • 1967: திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றது; திமுக ஆட்சியைப் பிடித்தது.
  • 1971: திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்; திமுகவே மீண்டும் அரியணை ஏறியது.
  • 1977, 1980, 1984: எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக இங்கு தொடர்ச்சியாக வென்றது; தமிழகத்தில் மூன்று முறையும் அதிமுக ஆட்சியே அமைந்தது.
  • 1989: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தது.
  • 1991: வேடசந்தூரை அதிமுக கைப்பற்ற, ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட வேடசந்தூர், இம்முறை யாருக்குச் சாதகமாக அமையும்? நாளை வெளிவரவுள்ள முடிவுகள் தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியை இப்போதே உறுதி செய்துவிடும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .