Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பஜா அடித்து, கூச்சல் குழப்பமிட்டு, அவைநடுவே ஆட்டம்போட்டமைக்கு தான் பொறுப்பல்ல என்று தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்வைக்கப்பட்டு, தவறவிடப்பட்ட திருத்தங்களை இணைப்பதற்குத் தடையில்லை என்பதுடன் அவைதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னதாக அதனைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம், கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, 'சபாநாயகர் அவர்களே, காணாமற்போனோர் அலுவலகம் பற்றிய சட்டமூலத்தில் கையெழுத்திட்டதாக, இன்று காலை (நேற்று), சபாநாயகரின் அறிவிப்பின் போது அறிவிப்பொன்றை விடுத்தீர்கள்.
அந்தச் சட்டமூலம் விவாதத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டபோது, நாடாளுமன்றத்தில சுமுகமான சூழல் காணப்படவில்லை.
அந்தச் சட்டமூலத்துக்கு, நாங்கள் முக்கியமான மூன்று திருத்தங்களை முன்வைத்திருந்தோம். அந்தத் திருத்தங்களை, அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. நீங்களும் ஏற்றுக்கொண்டிருந்தீர்கள். நீங்களும் அந்தத் திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தீர்கள். அந்தத் திருந்தங்கள், குழுநிலையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், திருத்தங்கள் யாவும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலை காரணமாக சரியாக முன்வைப்பதற்கு முடிந்திருக்கவில்லை. எம்முடைய திருத்தங்களுடன் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்கு நாம் சம்மதம் தெரிவித்திருந்தோம். அன்றைய ஹன்சாட் அறிக்கையில், எங்களுடைய திருத்தங்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அவ்வாறாயின், அந்தத் திருத்தங்களை மீண்டும் கொண்டு வர முடியுமா?' எனக் கேட்டார்.
அத்தோடு, 'அதேபோல், எங்களால் கொடுக்கப்பட்ட திருத்தங்களில் எட்டாம் பக்கம் முழுமையாக விடுபட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் இதில் உள்வாங்கப்படவேயில்லை. எனினும், இந்தத் திருத்தங்கள் யாவும் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படடிருந்தது.
சட்டமூலத்தில் நீங்கள் கைச்சத்திட்டுள்ளீர்கள். ஆகவே, இந்தத் திருத்தங்களை மீண்டும் முன்வைப்பதற்கும் அந்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் தயாரா?' என்று வினவினார்.
இதனிடையே எழுந்த, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன,
'சபாநாயகர் அவர்களே, நீங்கள், அந்தச் சட்டமூலத்தில் கைச்சாத்திட்டாலும் கூட, அன்றைய தினத்துக்கான ஹன்சாட், மேசையில் இன்று (நேற்று) இருந்தது.
சபை நடவடிக்கைகள், அன்றைய தினம் உரிய முறையில் நடைபெற்றிருக்கவில்லை என்பது, ஹன்சாட்டிலிருந்து தெளிவாகிறது. அவ்வாறான நிலைமையில், நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அன்றிருந்திருக்கவில்லை.
சட்டமூலத்தில், சர்வதேச சாசனம் என்ற சொற்றொடர் உட்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவையில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டதா? நாடாளுமன்றம், அதற்கு அங்கிகாரமளித்ததா? இது, அரசியலமைப்புக்கும் நிலையியற் கட்டளைக்கும் புறம்பானதாகும்.
அவ்வாறான பாரதூரமான விடயங்களை எடுத்துச் சொல்வதற்கே, நாங்கள் கூடுதலான நேரம் கேட்டோம். எனினும், நாங்கள் கேட்ட நேரம் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டமூலம் மீது, 31 திருத்தங்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இது தொடர்பில், சபாநாயகரின் கருத்தை கேட்கிறோம்' என்றார்
'பெறுமதி சேர் வரி (வற்) சட்டமூலம், இன்றைய (நேற்று) ஒழுங்குப்பத்திரத்தில் இருக்கிறது. அந்தச் சட்டமூலம், முறையான நடைமுறையைப் பின்பற்றியிருக்கவில்லை என்று, நீங்கள் தான் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைச் சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அப்படியாயின், அந்தவிவகாரம் ஏன் ஒழுங்குப்பத்திரத்தில் இன்னும் இருக்கவேண்டும். இது உடனடியாக நீக்கப்படவேண்டும்' என்று மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்த, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'அதனை நாங்கள் நீக்கிக்கொள்கின்றோம்' என்றார்.
குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 'காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான சட்டமூலத்தை, வாக்கெடுப்புக்கு விடவேண்டுமென நான் கேட்டேன்.
கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நான் கேட்டது, உங்களுக்கு (சபாநாயகருக்கு) கேட்காமல் இருந்திருக்கலாம். அந்தச் சட்டமூலத்தை, அன்று தான்தோன்றித்தனமாக நிறைவேற்றப்பட்டதனால்தான், அரசாங்கம் கொண்டு வந்த திருத்தமும் அதேபோல் ஏனைய திருத்தங்களும் உள்வாங்கப்பட முடியாமல் போயுள்ளது.
அன்று, திருத்தத்தை முன்வைத்து ஆதரவளிக்க முன்வந்தவர்களின் நம்;பிக்கையும் இழக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வந்து, அந்தத் திருத்;தங்களை உள்வாங்கும் தார்மீகப் பொறுப்பு, அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இது, எமது பாதுகாப்புப் படையினருக்கு எதிரான முறைப்பாடுகளை உருவாக்கும் அலுவலகம் உருவாக்கப்படுகிறது. இது, 1970 மற்றும் 1980களில் சம்பந்தப்பட்ட விடயத்துடன் தொடர்புடையது அல்ல. உண்மையில், இது யுத்தக்காலத்துடன் தொடர்புடைய இராணுவம் பற்றியதாகும்' என்றும் சுட்டிக்காட்டினார்.
வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொள்வதில் நாம், மிகவும் அக்கறையாக இருந்தோம். விவாதத்தை நிறுத்திக் கூச்சல் குழப்பமிட்டது நாமல்ல, நீங்கள்தான் குழப்பினீர்கள். (ஒன்றிணைந்த எதிர்க்க்ட்சியை பார்த்து) நீங்கள், சபைக்கு நடுவே வந்திருக்காமல். ஆசனங்களுக்குச் சென்று இருந்திருந்தால், விவாத்ததை நடத்தியிருக்கலாம்.
இந்தச் சட்டமூலமானது, மே மாதம் 22ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தச் சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, யாரும் நீதிமன்றம் சென்றிருக்கவில்லை.
இது தாமதமாகிவிட்டது. நீங்கள் (சபாநாயகர்) கையொப்பமிட்டு விட்டீர்கள். இந்த நடவடிக்கையைத் திரும்ப பின்கொண்டு செல்ல முடியாது. திருத்தங்களை வாசித்திருந்தால், அனைத்தும் உள்வாங்கப்பட்டிருக்கும். அந்தக் குழப்பத்துக்கு மத்தியிலும் நான் வாசித்தேன். நீங்கள் வாசித்தீர்களாக என்று எனக்குத் தெரியாது. என்பதுடன், நாம் அது பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்' என்றார்.
குறுக்கிட்ட அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, 'அவைக்குள் இறங்கி ஆடிய நாடகத்தினால், எமது திருத்தங்களை உரிய முறையில் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்தத் திருத்தங்களை மீண்டும் ஏன் உள்வாங்க முடியாது?' என்று வினவினார்
அதற்குப் பதிலளித்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, 'பொதுவாக, திருத்தம் கொண்டு வரப்பட்டால், அது வாசிக்கப்பட வேண்டும்' என்று தெரிவிக்கையில், குறுக்கிட்ட ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க, 'அந்தக் குழப்பத்துக்கு மத்தியிலும் நான், திருத்தங்கள் மூன்றையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
குழப்பம் ஏற்படுத்தியவர்களினால், எமது உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவை, ஏற்கெனவே இணக்கம் காணப்பட்ட திருத்தங்கள். இதை மீண்டும் மீண்டும் பேசிப் பலனில்லை. இதைத் திருத்த இணக்கம் தெரிவியுங்கள். அதேபோல், சபாநாயகர், அதிகாரிகள், அரசாங்கத் தரப்புக்கும் ஏற்கெனவே முன்வைத்திருக்கிறோம்' என்றார்.
அதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, 'அப்படியென்றால் அன்று நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி, மிக விரைவில் பதிலொன்றை நாம் தருகிறோம். நான் அமைச்சருடன் கலந்தாலோசிக்க வேண்டும்' என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க, 'காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் செயற்படும் முறைமை தொடர்பில் நீதி அமைச்சருக்கு, இந்தச் சட்டமூலத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில ஒழுங்குவிதிகளை ஏற்படுத்துவதற்கு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கும் மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மூன்று மாதத்துக்கும் அதிகமான காலம் எடுக்கும். ஆகவே, வரவு-செலவுத்திட்டத்துக்கு முன்னதாக இந்தச் சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை கொண்டு வருவதற்கு, போதுமான கால அவகாசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகவே, செயற்படுவதற்கு இது தடையல்ல' என்றார்.
இந்தவிவகாரம் தொடர்பில் கருத்துரைத்த சகலரின் கருத்துக்களையும் செவிமடுத்த சபாநாயகர் கருஜயசூரிய, 'நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் குழப்பங்கள் ஏற்பட்டமைக்கு நான் காரணமல்ல. அதேபோல, ஆரம்பத்தில் கூச்சல் இருந்தது. பின்னர் பஜா போடப்பட்டது. அந்தக் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், சில உறுப்பினர்களினால் கேட்கப்பட்ட விடயங்களுக்கு, என்னால் உரியமுறையில் பதில் வழங்கமுடியாமல் போய்விட்டது. அதற்காக மன்னிக்கவும். திருத்தங்களை இணைப்பதற்குத் தடையில்லை' என்றார். இந்த விவாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க, 'முன்வைத்த கோரிக்கை ஒரு நல்ல விடயமாகும். அதுதொடர்பில் உரிய அமைச்சருடன் கலந்துரையாடி முடிவெடுப்போம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago