Editorial / 2026 மே 03 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
தாய்லாந்திலிருந்து 112 கிலோகிராம் 'குஷ்' (Kush) மற்றும் 'ஹேஸ்' (Hash) ரகப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்ததாகக் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் மற்றும் இக்குழுவின் தலைவர் எனக் கருதப்படும் அக்குனுகலே அமிதானந்தா தேரர் உட்பட 23 பேரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை (02) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களான தேரர்களுக்கு ஆதரவாக நீதிமன்றிற்கு வந்திருந்த மற்றொரு தேரர், ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தபோது இரவு 7 மணியை நெருங்கியிருந்ததால், நீதிமன்ற வளாகம் இருளில் மூழ்கியிருந்தது. அங்கிருந்த படிக்கட்டுகளுக்கு அருகே எரிந்துகொண்டிருந்த ஒரேயொரு பெரிய மின்விளக்கின் ஒளியிலேயே நீதிமன்ற வளாகம் காணப்பட்டது.
சந்தேக நபர்களான 23 தேரர்களும் சிறைப் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதை ஊடகவியலாளர்கள் காணொளி எடுக்கக் கூடாது என்பதற்காக, அங்கு வந்திருந்த ஒரு தேரர், மற்றொரு தேரருக்குப் பணிப்புரை வழங்கினார். அதற்கமைய, அந்தத் தேரர் தனது அங்கியைக் கழற்றி, எரிந்துகொண்டிருந்த மின்விளக்கை மூடி நீதிமன்ற வளாகத்தை முழுமையாக இருளாக்கினார். இருப்பினும், ஊடகவியலாளர்கள் தமது கைபேசிகளின் ஒளியைப் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்தனர்.
சந்தேக நபர்கள் சிறைப் பேருந்தில் ஏறும் வரை ஊடகவியலாளர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தத் தேரர் ஊடகவியலாளர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். "நிரபராதிகளான தேரர்கள் இச்சம்பவத்தில் திட்டமிட்டுச் சிக்கவைக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் அங்கிகளைக் கழற்றுவதற்கு அரசாங்கம் சதி செய்கிறது," என்றும் அவர் இதன்போது கூச்சலிட்டார்.
"போதைப்பொருளை நாட்டுக்குக் கடத்தி வந்து சர்வதேச மட்டத்தில் நாட்டை அவமானப்படுத்தியது குற்றமில்லை; ஆனால் அவர்களைச் சிறைப் பேருந்தில் ஏற்றிச் செல்வதைப் படம் பிடித்தது குற்றமா?" என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், தமது கடமைக்கு இடையூறு விளைவித்த அந்தத் தேரருக்கு எதிராக நீதிமன்றப் பதிவாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .