2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்னார் கிணறு தோண்டுதல் பிற்போடப்பட்டது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றைத் தோண்டும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போதும், அரச சட்ட வைத்திய அதிகாரி சமுகமளிக்காததன் காரணத்தினால் குறித்த கிணற்றைத் தோண்டும் நடவடிக்கைகள் பிற்போடப் -பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு தொடர்பான வழக்கு விசாரணைகள், மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த கிணற்றை, மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக, அரச திணைக்களத்தில் இருந்து 13 நிறுவனங்களில் இருந்து உரிய அதிகாரிகள், குறித்த மனிதப் புதைகுழிப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாய் இருந்தனர்.
அடையாளம் காணப்பட்ட குறித்த கிணற்றை, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா வருகை தந்து பார்வையிட்டதோடு, நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அரச சட்ட வைத்திய அதிகாரிகள் கொழும்பில் இருந்தும் மன்னாரில் இருந்தும் குறித்த இடத்துக்கு வருகை தராமையினால், குறித்த கிணற்றைத் தோண்டும் பணியினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மன்னார் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை மாலை 2 மணியளவில், இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதற்குத் தவணையிட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் அரச திணைக்கள அதிகாரிகளாக அழைக்கப்பட்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், குண்டுவெடிப்புப் பிரிவினர், மன்னார் பொலிஸார் உட்பட, பல திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மன்னார் நீதவான் எ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் 29ஆம் திகதி, குறித்த புதைகுழி தொடர்பாக அழைக்கப்பட்ட அரச திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதனைத்தொடர்ந்து, குறித்த கிணற்றைத் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 29ஆம் திகதி காலை 11 மணிக்கு, மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறித்த கிணற்றைத் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மன்னார் நீதிமன்றத்தில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள்  மற்றும் அடையாளம் காணப்பட்ட கிணறு தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது, காணாமல் போனவர்களின்  குடும்ப  உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன், சட்டத்தரணி ரனிதா ஞானராஜா மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிராய்வா, ஜெபநேசன் லோகு, துசித் ஜோன்தாசன் ஆகியோர் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .