2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’அரசியல் கைதிகள் விடுதலையிலும் மனிதாபிமானத்துடன் செயற்படுவார்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன், எப்.முபாரக்

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி, சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையிலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர்  ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், சிறு குற்றங்களைப் புரிந்த அதிகளவான கைதிகளையும் மனிதாபிமான ரீதியில் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக் ஷ விடுதலை செய்து வருகின்றார். இந்நிலையில், 20ஆவது அரசமைப்புத்  திருத்தத்தின் மூலம் அதிகாரங்களைப் பெற்றுள்ள ஜனாதிபதி, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான விசாரணைகளை முன்னெடுக்கவும், அதனை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அவர்களது விடுதலை பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்றார். 

 அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள்,  ஜனாதிபதியுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடி அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

மனதளவிலும் உடலளவிலும் மிகவும் நலிவடைந்த நிலையில் வாழ்கின்ற அரசியல் கைதிகள், அவர்களது இறுதிக் காலத்தையாவது தங்கள் குடும்பத்துடன் செலவிடுவதற்கான உயரிய வாய்ப்பை ஜனாதிபதி வழங்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்கும் முகமாக இந்தச் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X