Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளரான தேரர் ஒருவர் உட்பட கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் 4 பேரை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற வேளையில், தங்களின் நிரந்தர நியமனக் கோரிக்கையை முன்வைத்து அம்மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும்;; தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்குரிய இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த விடயத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, எவருக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த இடைக்காலத் தடை உத்தரவுப் பிரதியை வழங்கியபோது, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய மேற்படி தேரர், அப்பிரதியைக் கிழித்து எறிந்து காலில் போட்டு மிதித்ததுடன், அவதூறாகவும் ஏசியுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு பொலிஸார் தெரியப்படுத்திய நிலையில், தேரர் உட்பட வேலையற்ற பட்டதாரிகள் 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான், புதன்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .