2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'மீண்டும் ஆளுங்கட்சியில் இணைவதற்காக ரூ. 25 கோடிக்கு விலைபேசினர்'

Thipaan   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். கீதபொன்கலன்

என்னை 25 கோடி ரூபாய்க்கு விலை பேசினார்கள். மீண்டும் தனது தந்தைக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் விரும்பும் எல்லாவற்றையும் தருவதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி என்னிடம் கூறினார் என்று முன்னாள் புத்தசாசன பிரதி அமைச்சரும் எம்.பி யுமான எம்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்தார்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்;கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலை 4ஆம் கட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நான், அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் என்னுடன் இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினார். 25 கோடி ரூபாய் தருவதாகவும் எனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டார்.

நாமல் ராஜபக்ஷ என்னுடன் பேசினார். 'அங்கிள் மன்னித்துக்கொள்ளுங்கள், உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள், எனது தந்தை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். நீங்கள் எங்களுடன் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் எதைக்கேட்டாலும் தர தயாராக இருக்கின்றோம்' எனக் கூறினார்.

எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று நான் அரசாங்கத்தை விட்டு விலகவில்லை, இவை எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் சிறிய தந்தைதான். அதனை பற்றி உங்கள் தந்தையுடன் கதைத்துள்ளேன். ஆனால், அதனை அவர் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் பின்னரும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்க முடியாது. அதனால் வெளியேறினேன். இதனை உங்கள் தந்தைக்கு சொல்லுங்கள் எனக்கூறினேன்.

அவர், நிச்சயமாக இதனை அவரது தந்தைக்கு கூறமாட்டார் என்று எனக்கு தெரியும். காரணம் இப்போது குடும்பத்துக்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவும்; என்னுடன் அரை மணிநேரம் பேசினார். 'ஏன் இப்படி செய்தீர்கள், ஏன் என்னுடன் இது பற்றி கதைக்கவில்லை என வினவினார்.

நான் கூறினேன், நீங்கள் யார்? ஏன் நான் உங்களுடன் கதைக்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஐனாதிபதியின் தம்பி, பாதுகாப்பு செயலாளர். கட்சியின் பழைய உறுப்பினர்களை நன்கு அறிந்தவன் என்றார். சரி அப்படியானால் அதற்கு நான் என்ன செய்ய என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை கொஞ்சம் யோசியுங்கள் என்றார்.

இனிமேல் யோசிக்க எதுவுமில்லை உங்களுக்கு தேவையென்றால் என்னை கொலை செய்துவிடுங்கள். நான் மனித தன்மைக்கு மட்டுமே கீழ்ப்படிவேன், அதனை விடுத்து பஷில் ராஜபக்ஷ என்ற ஊத்தை உள்ள சேற்றில் விழ நான் தயாராக இல்லை என்றேன்.'

'இது மட்டுமல்ல, கோட்டாபயவும் ஐனாதிபதி செயலக அதிகாரியும் மைத்திரிபால சிறிசேனவுடன் சுமார் 3 மணி நேரம் கதைத்தார்கள். ஐனாதிபதியின் நாடாளுமன்ற செயலாளர் குமாரசிறி ஹெட்டிகொட மூன்று தடைவை என்னுடன் கதைத்தார். அவர், எனக்கும் ஐனாதிபதிக்கும் மிக நெருங்கிய நண்பர். எப்போதும் அவரும் ஐனாதிபதியும் நானும் ஒன்றாகத்தான் உணவு உண்போம்.

குணே, என்னை உங்களுடன் கதைக்குமாறு ஐனாதிபதி கூறினார். அவர் மிகவும் கவலைப்படுகின்றார்,  நீங்கள் அவருடன் வந்து மீண்டும் சேருங்கள். அவருக்கு உங்கள் மீது எந்தக்கோபமும் இல்லை. இது வரை அவர் உங்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட குறைவாக பேசவில்லை. நீங்கள் எந்த நேரமும் அலரி மாளிகைக்கு வரமுடியும். உங்கள் முடிவை மாற்றுங்கள் என்றார். இதற்கு நான் கூறினேன் மீண்டும் அந்த அழுக்குள்ள இடத்துக்கு வர நான் விரும்பவில்லை என்று.

'நண்பர்களே இப்போது நம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி நாட்டைப்பாதுகாப்பதா? அல்லது தனிப்பட்ட ஒரு குடும்பத்தை பாதுகாப்பதா? என்பதேயாகும். அதற்காக தீர்மானமெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.'என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .