2025 ஜூன் 25, புதன்கிழமை

சமயங்களை மதிக்கும் பண்பு இந்த அரசாங்கத்தில் இல்லை: இம்ரான் மஹ்ரூப்

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

“எந்தச் சமயத்தையும் மதிக்கும் பண்பு இந்த அரசாங்கத்தில் இல்லை. இதனால் அரசாங்கம் பல வழிகளில் வழிதவறிச் சென்று கொண்டிருக்கிறது” என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை(11) அளுத்கமை, பேருவளைப் பகுதிகளுக்கு விஜயம் செய்த இவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளின்போது இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,

“ஒரு மனிதனை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கு சமயங்கள் வழிகாட்டுகின்றன. எனவே, சமய ஈடுபாடுள்ள ஒரு மனிதன் ஒருபோதும் வழிதவறமாட்டான். ஆனால் இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது சமயங்களைப் புறக்கணித்துச் செயற்படுகின்றது. இந்நிலையில் இந்த அரசு நேர்மையாகச் செயற்படும் என எப்படி எதிர்பார்க்க முடியும்.

உண்மையான சமய ஈடுபாடுள்ள ஒருவன் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது ஆண்டவன் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் இதற்கான பிரதிபலனை எனக்குத் தருவான் என்ற அச்சநிலை இருக்கும். அதனால் அவன் தவறு செய்ய அச்சப்படுவான்.

ஆனால், அளுத்கமை, பேருவளைப் பகுதிகள் தாக்கப்பட்டது சின்ன விடயம். இதனைப் போய் ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்று நாட்டுத் தலைமை சொல்கின்ற அளவுக்கு மனநிலைகள் இன்று இருக்கின்றன. எனவே இங்கு சமயப் பற்று இருக்கின்றதா?  என்று சிந்தியுங்கள்.

கசினோவை பௌத்த துறவிகள் உட்பட சகல சமயத்தலைவர்களும் எதிர்த்தார்கள். எனினும் அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

சட்ட மூலத்தை சமர்ப்பித்து அதனை சட்டமாக்கியது.  அண்மையில் கண்டியில் கார்ப் பந்தயம் நடத்தப்பட்டது. இதனை முக்கிய பௌத்த குருமார் அனைவரும் எதிர்த்தார்கள். எனினும் இது கவனத்தில் கொள்ளப்படவில்லை. கார் பந்தயம் நடத்தப்பட்டது.

பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன. இது முழுநாடும் அறிந்த விடயம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என ஜனாதிபதி சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கோயில்கள் தாக்கப்படுகின்றன, தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. இது இந்நாட்டில் சர்வசாதாரணமான விடயங்களாக இன்று மாறிவிட்டன.

எனவே, சமயங்களுக்கு மதிப்பில்லாத ஒரு ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது வேதனைக்குரிய விடயமாகும். நிலைமை இப்படியே நீடிக்குமானால் எப்படி  நாம் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியும். ஒழுக்கம், பண்பாடு எல்லாம் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நமது எதிர்கால சந்ததியினரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

எனவே, இதற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாக மாறிவிட்டது. இதற்காக அனைவரும் உழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனை செயற்படுத்த நமக்குள்ள ஒரே வழி அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்கள் தான். இந்த தேர்தல்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி இந்த கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

அமைச்சர்கள் சொல்லி விட்டார்கள். அல்லது நமக்கு வேண்டிய ஒருவர் இக்கட்சியில் கேட்கிறார் என்றெல்லாம் சிந்தித்து இந்த அரசுக்கு நாம் மீண்டும் வாக்களிப்போமானால் நமது கண்ணில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு விட்டோம் என்பதைத் தவிர வேறு இல்லை.

எனவே, இந்த ஆட்சியை மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இது அனைவர் மீதுமுள்ள தார்மீகக் கடமையாகும்” என அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .