2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'கருமலையூற்று பள்ளி திறப்பு: தேர்தல்கால மாயாஜாலம்'

Thipaan   / 2014 டிசெம்பர் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கருமலையூற்று பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டமையானது தேர்தல் கால மாயாஜாலம் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் தற்போது திறந்து விடப்பட்டுள்ள கருமலையூற்று பள்ளிவாயல் மீண்டும் படையினரின் கட்டுப்பாட்டில் வந்து விடும் எனவும் கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா, காக்காமுனையில் றபாய்தீன் தலைமையில் திங்கட்கிழமை மாலை(15) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகளில் ஒன்று கருமலையூற்று பள்ளிவாயல். சுமார் 400வருட பழைமை வாய்ந்த இப்பள்ளிவாயலை படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்ததால் அப்பகுதிக்குச் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பள்ளியின் கட்டடம் படையினரால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி மீனவர்கள் தந்த தகவலையடுத்து உடனடியாக இதனை மக்கள் மயப்படுத்தும் வேலையை ஊடகங்கள் மூலம் நான் மேற்கொண்டேன். நான் எதிர்க்கட்சி என்ற வகையில் பொய்ப் பிரசாரம் மேற்கொள்வதாக அப்போது கூறப்பட்டது.

எனினும், உண்மையை யாரும் மறைக்க முடியாது என்ற அடிப்படையில் அது வெளிப்பட்டு விட்டது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரனையொன்றின் அடிப்படையில், சகல மாகாண சபை உறுப்பினர்களையும் ஒரு மாத காலத்துக்குள் அப்பகுதிக்கு அழைத்துச் சென்று நேரில் காட்டுவதாக முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

எனினும், அவரை இந்த அரசு மதிக்கவில்லை. அதனால், அவரது கோரிக்கையை படையினர் நிராகரித்தனர். அவர் எங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி எந்தவொரு மாகாணசபை உறுப்பினரையும் கருமலையூற்றுக்கு அழைத்துச் செல்ல அவரால் முடியவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன், தௌபீக் எம்.பி ஆகியோரைக் கூட அப்பகுதிக்குச் செல்ல படையினர் அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று பள்ளிவாயல் அதன் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், முழுமையாக அல்ல.

பள்ளிக்குச் சொந்தமான கிணறு, ஹவ்ல் மண்டபம் என்பன தவிர சிறிய பகுதி மட்டும் வேலியடைத்து எல்லை போட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிக்குரிய வீதி அடைக்கப்பட்டுள்ளது. அது திறக்கப்படவில்லை. எனவே வேறு வழியைப் பயன்படுத்தியே பள்ளிக்கு செல்ல வேண்டும்.

இதிலிருந்து என்ன விளங்குகின்றது? முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் கேட்டும் பள்ளியைப் பார்க்கக்கூட அனுமதி மறுத்த அரசுக்கு இப்போது என்ன நடந்தது? பள்ளியை விடுவித்தாலும் இத்தனை மட்டுப்பாடு ஏன்?

எல்லாம் தேர்தல் கால மாயாஜாலம். முஸ்லிம்களின் வாக்கு பெரும்பாலும் மஹிந்தவுக்கு இல்லை என்பது தெரிந்து விட்டதனால் எப்படியோ கொஞ்சம் முஸ்லிம் வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஏமாற்று வேலை.

மஹிந்த வெற்றி பெற்றால் மீண்டும் இப்பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டு விடும். அதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இந்த உண்மை சகல முஸ்லிம்களுக்கும் தெரியும். எனவே, முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குப் பெறும் வித்ததை இம்முறை பலிக்காது இவ்வாறு அவர் கூறினார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .