2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 02 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை, மூதூர் தள வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திக் கோரி, நேற்று திங்கட்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

இவ்வைத்தியசாலை 2006ஆம் ஆண்டு தள வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டபோதும் போதுமான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பற்றாக்குறையுடன் பௌதீக வளங்களுமின்றி இயங்கி வருவதாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எஸ்.எம். தஸ்லீம் தெரிவித்தார்.

மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மூவின மக்களும் இந்த வைத்தியசாலையை சிகிச்சைக்காக நம்பியிருக்கின்றார்கள்.
நாளாந்தம் சுமார் 500 இற்கும் 600 இற்கும் இடைப்பட்ட நோயாளிகள் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றார்கள்.

அதேவேளை, வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற வரும்போது அவர்கள் நிற்பதற்குக் கூட இடவசதியில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.

இவ்வைத்தியசாலையில் 26 வைத்தியர்களுக்கான தேவை இருந்தும் 09 வைத்தியர்களே கடமை புரிகின்றார்கள்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரேனும் இவ்வைத்தியசாலையில் கடமையில் இல்லை.
எனவே, இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரியே எமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இவை தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எஸ்.எம். தஸ்லீம் மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரோடு இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராமிய மட்ட சமூக அமைப்புக்களும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .