2025 மே 14, புதன்கிழமை

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

R.Tharaniya   / 2025 மே 13 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில்  நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (13) மதியம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்டது.

 மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் கீழ் கண்டவாறு கருத்துரைத்தனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு தாய்மாரும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழினமும் கொல்லப்பட்டு,அழிக்கப்பட்ட அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தமும்,சதையும் சிந்தப்பட்டு அந்த நாளை கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் நினைவு கூர்ந்து கஞ்சி காய்ச்சி வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கஞ்சி 16 வருடங்களுக்கு முன் ஒரு பிடி அரிசி கூட கிடைக்காமல் இருந்த அரிசியை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பும் இல்லாமல் அங்கிருந்த அமைப்புகள் குறித்த கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர். 

அதில் சிலருக்குத்தான் இந்த கஞ்சி கிடைத்தது.வரிசையில் நின்று இந்த கஞ்சியை வாங்கி பசியை போக்குவோம் என்ற நேரத்தில் கூட கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது அந்த  அரசாங்கத்தினால்.

 கஞ்சிக்காக வரிசையில் நின்ற எத்தனையோ உறவுகள் கஞ்சி கிடைக்காமல் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.இன்று அதை மறக்கவும் முடியாது.மன்னிக்கவும் முடியாது.

எம் இனத்திற்கு நடந்த கொடூரத்தை உலக நாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.இன்று வரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த கஞ்சியை நாம் வழங்குவதற்கு காரணம் தற்கால இளைய சமூகத்திற்கு 16 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தெரியாது.

16 வருட கால இடைவெளியில் நிறைய நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அவை எல்லாம் எம் சமுதாயத்தின் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இன்று வரையும் இரத்தமும் சதையும் சிந்திக் கொண்டே இருக்கிறது.அதனை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி ஒவ்வொரு இறந்த ஆத்மாக்காகவும் நினைவு கூற வேண்டும்.

அது தான் நாம் எம் இனத்திற்கு செய்கின்ற பரிகாரம்.அதை தான் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாமும் நினைவு கூர்ந்து 16 வருடமாக அங்கே சென்று வந்து கஞ்சி காய்ச்சி நினைவு படுத்திக் கொண்டு வேதனைகளையும்,சோதனைகளையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு உள்ளங்களும் இன்று  வீதியில் நின்று போராடிக் கொண்டு,எம் உறவுகள் மீண்டும் எம்மிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காவல் நிற்கின்றோம்.

எம் கண்ணீர் என்று துடைக்கப் படுமோ தெரியாது.ஆனால் கண்ணீர் சிந்திய எத்தனையோ உறவுகளின் கண்கள் மூடி விட்டன.அந்த மூடிய கண்களுக்கு இந்த சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றதோ தெரியாது.இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ  தெரியாது.

இதற்கிடையில் வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும்.என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X