Editorial / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை இந்தியா வென்றபோதும் இரண்டாவது போட்டியை வென்ற அவுஸ்திரேலியா தொடரைச் சமப்படுத்தியுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் தோல்வியைடைந்தமைக்கான காரணங்களிலிருந்து முழுமையாக இந்தியா புத்துணர்ச்சி பெற்று மெல்பேணில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்டில் களமிறங்குமா என்ற கேள்விக்குறி காணப்படுகிறது.
ஏனெனில், வழமையான நிகழ்வு போல தற்போது ஆகிவிட்டது போன்ற இந்திய அணித்தலைவர் விராத் கோலியின் அணித்தெரிவுகள் இரண்டாவது டெஸ்டிலும் பலத்த விமர்சனத்தை தோற்றுவித்ததுடன், அந்த விமர்சனங்கலிருந்து தம்மை பாதுகாக்கப் போய் கோலி, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி ஷாஸ்திரி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஷாஸ்திரியின் கருத்துப்படி, முழுமையான உடற்றகுதி இல்லாமலேயே இத்தொடரில் இரவீந்திர ஜடேஜா இருந்துள்ளார். இந்நிலையில், அவ்வாறு இருந்த ஜடேஜாவை ஏன் இரண்டாவது டெஸ்டில் ஏறத்தாழ 20 ஓவர்கள் வரையில் களத்தடுப்பிலீடுபடச் செய்தார்கள் என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில், ஷாஸ்திரி தெரிவித்த கருத்துகளுக்கு பிற்பாடு அறிக்கையொன்றை விடுத்திருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மூன்றாவது டெஸ்டுக்கு ஜடேஜா தயாராகி விடுவார் எனத் தெரிவித்திருந்தது.
மறுபக்கம், முதலாவது டெஸ்டில் காயமடைந்திருந்த இரவிச்சந்திரன் அஷ்வின், ரோகித் ஷர்மா ஆகியோர் பூரணமாகக் குணமடையவில்லை எனக் கருதப்படுகின்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் விளையாடிய நான்காவது வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ்வுக்குப் பதில் ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தடுமாறிவருகின்ற நிலையில், மாயங்க் அகர்வால் அறிமுகத்தை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், அவருடன் செட்டேஸ்வர் புஜாரா அல்லது ஹனும விஹாரி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் பட்சத்தில் சகலதுறை வீரராக ஹர்டிக் பாண்டியா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணியில் முதலிரண்டு டெஸ்ட்களிலுமிருந்து விளையாடிய அணிகளில், துடுப்பாட்டவீரர் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்பை சகலதுறைவீரர் மிற்செல் மார்ஷ் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹன்ட்ஸ்கொம்பின் ஆட்டமிழப்புகள் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், இப்போட்டியில் பந்துவீச்சு சுமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இம்மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்தாண்டு மெல்பேணில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட், சுவாரஷ்யமில்லாத மெதுவான ஆடுகளத்தால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நிலையில் இம்முறை ஆடுகளமும் முக்கிய கவனம் பெறுகிறது. தற்போது ஆடுகளம் பச்சையாக காணப்படுகின்றபோதும் இந்த டெஸ்ட் முழுவதும் வெப்பமான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஆடுகளம் தட்டையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago