2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்கை ரஷ்ய நட்பு நாடுகள் புறக்கணிக்கும்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 11 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவந்துள்ள ஊக்க மருந்து தொடர்பான அறிக்கையைத் தொடர்ந்து, அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு, றியோவில் 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அடுத்த ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டால், ரஷ்யாவின் நட்பு நாடுகள், அந்த ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் தடகள சம்மேளனத்தின் தலைவர் எட் வோணர், தொடர்ந்தும் அரசால் ஆதரவு வழங்கப்படும் ஊக்க மருந்துப் பாவனையில் ரஷ்யா ஈடுபடுமாயின், அந்நாடு மீதான தடையால் ஏற்படக்கூடிய மேற்படி நிலைமை, செலுத்தப்படக்கூடிய பொருத்தமான விலையே எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒலிம்பிக்கில் ரஷ்யாவை அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கம், நாளை வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ள நிலையில், அக்கூட்டத்தில் வைத்து ரஷ்யா மீது தடை விதிக்கப்பட வேண்டுமென, வோணர் தெரிவித்துள்ளார். அத்தோடு, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலக கனிஷ்ட சம்பியன்ஷிப்ஸ் தொடரிலிருந்தும் ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

'தவறு செய்த நாடொன்றினைத் தடை செய்தால், அந்நாட்டின் பின்னால் ஏனைய நாடுகள் ஒன்றுசேர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவுக்குப் பெரிய தலையிடியை வழங்குமென்பதற்காக, அந்நாட்டை ஒன்றும் செய்யாமல் விட, நான் விரும்ப மாட்டேன்" என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஊக்க மருந்துப் பாவனை அதிகமாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், தேவையான எல்லா அளவீடுகளையும் கருத்திற்கொண்டு, தவறுசெய்த ரஷ்ய ஊக்கமருந்துப் பாவனையாளர்களின் பதக்கங்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு, வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .