2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

துவம்சம் செய்யப்பட்டது இலங்கை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை அணியைத் துவம்சம் செய்து, நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ஓரளவு வேகமான ஆரம்பமாக, 3.4 ஓவர்களில் 20 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை சார்பாக, 4ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் திலகரட்ண டில்ஷான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, 5 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இறுதியில், 117 ஓட்டங்களுக்கு, அவ்வணி ஆட்டமிழந்தது.

துடுப்பாட்டத்தில் நுவான் குலசேகர 19, அஞ்சலோ மத்தியூஸ் 17, தனுஷ்க குணதிலக 17, மிலிந்த சிரிவர்தன 12, சாமர கப்புகெதர 12 ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எந்த வீரரும், இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில், மற் ஹென்றி 4, மிற்சல் மக்லநகன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மோசமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்ற இலங்கை அணி, கௌரவமாகாத் தோல்வியடையும் எண்ணத்தை, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் இல்லாது செய்தார். போட்டியின் முதலாவது பந்தில், அவர் வழங்கிய கடினமான பிடியொன்றை மிலிந்த சிரிவர்தன தவறவிட, அதன் பின்னர் அதிரடியாக ஆடினார். ஒரு கட்டத்தில், 12 பந்துகளில் 46 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவர், 16 பந்துகளில் அரைச்சதம்பெற்று, வேகமான அரைச்சதமென்ற ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தார். எனினும், 17 பந்துகளிலேயே அவரால் அரைச்சதம் பெற முடிந்தது. இதனால், சனத் ஜெயசூரிய, குசால் பெரேரா ஆகியோரின், இரண்டாவது வேகமான அரைச்சதம் என்ற சாதனையை அவர், சமன் செய்தார்.

அவர் சந்தித்த பந்துகளில், 4, 1, 1, 6, 4, 4, 0, 6, 6, 6, 4, 4, 0, 1, 1, 1, 1, 4, 6, 6, 4, 0, 6, 0, 4, 4, 1, 6, 1, 1 என ஓட்டங்களைப் பெற்ற அவர், 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற, 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 118 என்ற இலக்கை, நியூசிலாந்து அடைந்தது.

இந்தத் தோல்வி மூலம், 0-2 என்ற கணக்கில், இத்தொடரில் இலங்கை பின்னிலையில் காணப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .