2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்து; கர்ப்பிணியின் வயிற்றில் 9 மாத சிசு மரணம்

Editorial   / 2022 ஜனவரி 18 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வாழைச்சேனை - வாகரை பிரதான வீதியிலுள்ள  காயங்கேணி பாலத்துக்கு அருகில் ஓட்டோவும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியில் வயிற்றில் இருந்த 9 மாதங்களான சிசு, நேற்று (17) மரணமடைந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்துத் தெரியவருவதாவது, “திருகோணமலை, ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது 9 மாத கர்பணிதாயான சிவானந்தம் சுபாஜினி மற்றும் அவரது உறவினர் உட்பட 4 பேர்,  சம்பவ தினமான சனிக்கிழமை (15) பூநகரில் இருந்து பொலன்னறுவை - செவினப்பிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஓட்டோவில் பயணித்துள்ளனர்.

பிற்பகல் 2 மணியளவில், காயங்கேணி பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கையில், ஓட்டோவின் பின் பக்க ரயர் காற்றுப் போனதையடுத்து, வீதியோரத்துக்கு ஓட்டோவை நிறுத்த முற்பட்ட போது, பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

இதில் கர்ப்பிணியும் அரவது உறவினர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து  சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் இருந்த சிசு மரணித்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் சிசுவை வெளியில் எடுத்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, காரை செலுத்திச் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X