2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

வீதியை மூடியமைக்கு மக்கள் எதிர்ப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கிரான்குளம், அமரபுரம் கிராமத்தில் 15 வருடங்களாகப் பயன்படுத்தி வந்த கிரான் குளம் புதுக்குடியிருப்பு வீதியை இரண்டு மாதங்களாக பலவந்தமாக மூடி வைத்திருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்த்துத் தெரிவித்துள்ளனர்.

அந்த வீதியைத் திறந்து, மக்களின் வீதிப் போக்குவரத்துக்கு வழி செய்யுமாறு, கிரான்குள பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலுக்கு முன்பாக இன்று(05) பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

காணி சீர்திருந்த ஆணைக்குழுவின் அதிகாரி விமல்ராஜ் என்பவரே மேற்படி வீதியை அடைத்து வைத்துள்ளார் எனவும் இதனால் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப் பாதையை திறந்து தருமாறு கோரியும் அதே போன்று கடந்த 28.11 அன்று இப்; பிரதேசத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிராகவும் இந்த கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்தோடு, “15 வருடங்களாகப் பயன்படுத்தி வந்த வீதியை அநியாயமாக மூடாதே”, “காணித் திருடனுக்கு காணி ஆணையாளர் பதவியா?” மற்றும் “அரசே காணித் திருட்டு கும்பல்களை விசாரணை செய்” என்பன போன்ற வசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

இதில் பொதுமக்களுடன், மண்முனைப் பற்று தவிசாளர் டி.தயானந்தன் உட்பட மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேநேரம், இவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக அப்பகுதியிலேயே கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

எமது விளையாட்டுக்கழக மைதானத்தை, எமது கழக உறுப்பினர்கள் விளையாடுவதற்காக மீட்பதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே, மைதானத்தை எமக்குத் தரவேண்டும் என்றும் அரசியல் இலாபத்துக்காக பொது மக்களை அழைத்து வந்து தவிசாளர் ஆர்ப்பாட்டம் செய்கின்றார் என எதிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயன சிறி, மேற்படி இரு ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X