Kogilavani / 2021 மார்ச் 22 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார், எனினும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தொடர்பிலான புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டே உள்ளன என்றும் சாடினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தறபோது நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அவை பிரதேச செயலக மட்டத்தில் தயார் செய்யப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன், மீள் நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் கண்டி மாவட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், உரிய தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை என்றும் குறிப்பாக, தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே, கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளதாகவும் எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது, புறக்கணிக்கப்பட்டே உள்ளன என்றும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் மிக அதிகமான சனத்தொகையையும் பரப்பளவையும் கொண்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிகமாக இருப்பது தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் ஆகும் என்றும் விசேடமாக, முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதிகளும், அதேபோன்று, பெருந்தோட்ட பகுதிகளும் இத்தகைய நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அப்பகுதிகளில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அதிகரிக்கவே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் எனினும் பிரதேச செயலக மட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அத்தேவையை பூர்த்தி செய்யாது உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கம்பளை உடபலாத்த, தொழுவ பிரதேச செயலக பிரிவுகள், நாவலப்பிட்டிய, பஸ்பாகே கோரல, குண்டசாலை மற்றும் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் செய்யப்படவில்லை என்றும் சனத்தொகை நான்காயிரம், ஐயாயிரத்துக்கு அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக்கூட, இரண்டாகப் பிரிப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
நிர்வாக அதிகார பகிர்வின் முக்கியமான ஓர் அம்சமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு காணப்படுவதாகவும் அதேபோன்று அரசியல் அதிகார பகிர்வுக்கான முக்கியத்துவத்தையும் இது அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே, இந்த மீள் நிர்ணயம் நடைபெறுவதாகவும் எனவே இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.
அதிலும் அரசாங்கத் தரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இவை தொடர்பாக தேடிப் பார்த்து அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்பதே கேள்வியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026