2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

நகர சபையில் பதற்றம் : முன்னாள் தலைவர் வெளிநடப்பு

Janu   / 2026 மார்ச் 25 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் செவ்வாய்க்கிழமை (24)  அமர்வின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக சபையில் பெரும் பதற்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, நகர சபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

நகர சபை தலைவர் அசோக கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சபையில் உரையாற்றிய உறுப்பினர் அழகுமுத்து நந்தகுமார், கடந்த 9 மாதங்களாக மக்கள் முன்வைத்த அடிப்படைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காணப்படவில்லை எனச் சாடினார். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு, முறையற்ற குப்பை மேலாண்மை , அதிகாரிகளின் அலட்சியப் போக்கு. போன்ற விடயங்கள் குறித்து அவர் சபையில் கடும் கண்டனங்களை முன்வைத்தார்.

விவாதத்தின் போது அழகுமுத்து நந்தகுமார் பயன்படுத்திய சில வார்த்தைப் பிரயோகங்கள் ஏனைய உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுத்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள், "சபையில் இவ்வாறான தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டனர்.

வாக்குவாதங்கள் முற்றிய நிலையில், “பயனற்ற சபை அமர்வுகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணாக்குவதை விட, எனது தனிப்பட்ட பணிகளைக் கவனிப்பது சிறந்தது” எனக் கூறிவிட்டு அழகுமுத்து நந்தகுமார் சபையிலிருந்து வெளியேறினார்.

அவர் வெளியேறிய பின்னரும் சபைத் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அவரது அநாகரிகமான நடத்தை குறித்து சபையில் அதிருப்தி வெளியிட்டனர். அத்துடன், நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மந்தகதியில் உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தற்போதைய நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .