Editorial / 2026 மார்ச் 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல். ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தையே உலுக்கிய கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கொலைகளுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை பெருமளவிலான மயக்க மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் கடத்தப்பட்ட பெண் ஒருவர், 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான இக்குழுவினர் முன்னெடுத்த விசாரணையில், வவுணதீவு - காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், அவர்களின் வீட்டு வளவினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த 6 மயக்க மருந்து குப்பிகள், மயக்க மாத்திரைகள் மற்றும் விசிறும் வகை (Spray) மயக்க மருந்து போத்தல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சாரதி கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து முச்சக்கர வண்டியும் ஒரு மயக்க மருந்து போத்தலும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


16 minute ago
35 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
36 minute ago