2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘நல்லடக்கம் செய்வதில் இழுபறி’

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

காலதாமதத்தைத் தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டி மாவில்மடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை, நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, கடந்த 1 வருட காலமாக விடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாகக் கூறினர். அதற்கு அடுத்த நாளே, பாராளுமன்றத்தில் மற்றொரு உறுப்பினர் அதை மறுத்தார். பின்னர், தொழில்நுட்பக் கமிட்டியின் ஆலோசனைக்கமைய அதை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். இப்படி, பல்வேறான இழுபறிகளுக்குப் பின்னர், வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்றனர். அதுவும் நடந்து முடிந்த நிலையில், அடக்கம் செய்வதற்கான வழிமுறைகள்  இன்னும் வெளியிடப்படவில்லை என்று இழுத்தடிக்கப்படுகிறது” என்று இதன்போது அவர் கூறினார்.

தற்போது அடக்கம் செய்வதற்கான வழிமுறைகள் தயாராக இருப்பினும், அடக்குவதற்கான இடத்தை தெரிவு செய்யவில்லை என்று கூறுவதாகவும்  அது தொடர்பான விவரம் கிடைத்த பிறகே, சுற்று நிரூபத்தை வெளியிட முடியும் என்று, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மிக விரைவில் அதையும் பூர்த்தியாக்கி, கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .