2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஹரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 06 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

கொட்டகலை - ஹரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக இரண்டு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டனர்.

சுமார் 300 ஏக்கர் பரப்பைக் கொண்ட மேற்படி தோட்டம், ஏ பிரிவு, பீ பிரிவு என இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

ஹரிங்டன் ஏ பிரிவை தனிநபர் ஒருவர் 5 பேருக்கு பிரித்துக்கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் எனவும்; இதனால் எதிர்காலத்தில் தோட்டத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விவசாயம் மற்றும்; கால்நடை வளர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் தடைவிதித்ததுடன் தொழிலாளர்கள் தமது வீடுகளைத் திருத்திகொள்வதற்கும் இடம்கொடுப்பதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்குத் தோட்ட உரிமையாளர் வரவேண்டும் எனத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட அதிகாரிகளை சிறைவைத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பத்தனை பொலிஸார், தோட்ட அதிகாரிகளை விடுவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, தோட்ட உரிமையாளருடன் பேச்சுவாரத்தை நடத்தும் வரை மீண்டும் தொழிலுக்கு செல்லும் படி தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும், தங்களது பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வினை தோட்ட உரிமையாளர் வழங்கும்வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .