2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'கைகோர்க்க நாங்கள் தயார் அவர்கள் தயாரா?'

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மைக்காக மலையகத்திலுள்ள ஏனைய தொழிற்சங்கங்களுடன் கைகோர்க்க நாங்கள் தயாராகவுள்ளோம். ஏனைய தொழிற்சங்கங்கள் தயாராகவுள்ளனவா? என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.

'தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்;கொண்டோம். இறுதியில் மூன்று தொழிற்சங்கங்கள்தான் இணைந்தன. அதுவே, மலையக  தமிழர் முற்போக்குக் கூட்டணி. இதனால்தான் எமக்கு 6 நாடாளுமன்ற உறுப்புரிமைக் கிடைத்தது.  3 அமைச்சுக்கள் கிடைத்தன. இதனால், தற்போது மலையகத்தில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை தொழிலாளர் வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர்' எனவும் அவர் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம், நேற்று(01) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க கல்வி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், 'தற்போது பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தினரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் சனத்தொகை பரம்பலுக்கு அமைய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும். தற்போது 9 பேரே உள்ளோம். இதற்கு  ஒற்றுமை இன்மையே காரணமாகும்.  இந்த ஒற்றுமை அதிகரிக்கும் பட்சத்தில் மலையகத் தொழிலாளர் வர்க்கத்தினர் முன்னேறுவார்கள் என்பதில் ஐயமில்லை' என அவர் சுட்டிக்காட்டினார்.

'சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் முறையாகப் பேசி முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு சம்பள உயர்வை தடைசெய்வதாக கூறுகின்றார்கள்.

அது பொய், அவர்களால் பேசி தீர்வு காண முடியவில்லை. அதற்காக இந்த நொண்டிச்சாட்டை கூறுகின்றார்கள். கூறுபவர்களும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து ஜனாதிபதியுடன்தானே இருக்கின்றார்கள். நாங்கள் பிரதமருடன் இருக்கின்றோம். ஜனாதிபதியுடன் இருப்பதால் எம்மைவிட அதிக பலம் அவர்களிடமே உள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார்.

'தோட்ட கம்பனிகள் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும், தேயிலைக்கு உலக சந்தையில் உரிய சந்தை வாய்ப்பு இல்லாமையே சம்பள உயர்வை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரியவருகின்றது. அத்துடன்; சிலர் 1,000 ரூபாய் சம்பளம் பெற்று தருகின்றேன் என்று கூறியதினாலேயே இந்த சம்பள உயர்வு இழுபறியாக உள்ளது.  இதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .