2026 மே 15, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்ட மக்களுக்கு உதவ பிரிட்டன் முன்வரவேண்டும்: அமைச்சர் கே.வேலாயுதம்

Princiya Dixci   / 2015 மே 07 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களுக்கு உதவுவதற்கு பிரிட்டன் அரசு முன்வரவேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.

'பசுமை பூமி' செயற்றிட்டம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முன்வர வேண்டும். அக்கடமைப்பாடு பிரிட்டனுக்கு பெரிதும் உள்ளது.  

இரு சகாப்தங்களுக்கு முன்னர் தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற பெருந்தோட்ட பயிர்களை பயிரிடுவதற்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை, பிரிட்டன் அரசு இலங்கைக்கு அழைத்து வந்தது. அத்தொழிலாளர்களின் உழைப்பில் தமது நாட்டை வளப்படுத்திக்கொண்ட அவர்கள், தாம் அழைத்து வந்த தொழிலாளர்களை அடிமை வாழ்கைக்கு இட்டுச்சென்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை மிக மோசமான லயன் வாழ்க்கைக்குள், மனித வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய அரசோ பிரித்தானிய மக்களோ கரிசனை காட்டாதது கவலைக்குறியதாகும்.

கல்வித்துறை, சுகாதார துறை, நவீன தொடர்பாடல் துறை என பல்வேறு துறைகளில் பின்னடைந்து, சொந்த வீடின்றி வாழ்ந்து வரும் இம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நடவடிக்கையின் முதல் கட்டமாக 7 பேர்ச் காணியும் காணி உரிமைப் பத்திரமும் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இக்காணிகளில் தனி வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு  இந்தியா ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

இந்தியாவை விட இத்திட்டத்துக்கு ஆதரவளித்து வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் தார்மீக பொறுப்பு பிரித்தானிய அரசுக்கே உள்ளது என்பதை நான் அந்த அரசுக்கு வலியுறுத்த உள்ளேன். இது தொடர்பாக பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவருடனும் கலந்துரையாடவுள்ளேன்.

இரு சகாப்தங்களுக்கு பின்னராவது தங்களால் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்காகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன்கூடிய தனி வசிப்பிடத்தை அமைப்பதற்காகவும்  உதவ வேண்டியது மனித நேயமாகும்.  அந்த மனித நேயத்தை வெளிப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தின் நன்மதிப்பை பெற பிரித்தானிய அரசு முயலுமென நம்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .