2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி மரணமடையவிருந்த 529 பேரை காப்பாற்றியுள்ளளோம்: ருவன் அபேவர்தன

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட் ஷாஜஹான்


2006ஆம் ஆண்டு முதல் இதுவரை வத்தளை பிரீத்திபுர மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பூங்கா ஆகிய கடற்பகுதிகளில்  நீரில் மூழ்கி மரணமடையவிருந்த 529 பேரை, கம்பஹா மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் உயிர்காப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர் என்று கம்பஹா மாவட்ட  செஞ்சிலுவை சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ருவன் அபேவர்தன தெரிவித்தார்.

நீரில் மூழ்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும், நீருள்ள பகுதிகளில் சுய பாதுகாப்பு கலாசாரத்தை உருவாக்கும் வகையிலும் 'தண்ணீர் பாதுகாப்பு செயற்றிட்டம்' எனும் செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) முற்பகல் கம்பஹா மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் வருடாந்தம் 1200 முதல் 1500 பேர்வரை நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

கடலிலும் ஆற்றிலும் மூழ்கி இறப்பவர்கள் தொடர்பான செய்திகளே ஊடகங்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. நீரில் மூழ்கவிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டமை தொடர்பான செய்திகள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.

எமது கம்பஹா மாவட்ட செஞ்சிலுவை சங்கம் நீரில் மூழ்கி மரணிப்பவர்களை காப்பாற்றும் வகையில் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்கிறது. அதன் பெயர் 'தண்ணீர் பாதுகாப்பு செயற்றிட்டம்' என்பதாகும். சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் எமக்கு அதற்கான நிதியுதவி வழங்குகிறது.

இந்த செயற்றிட்டம் யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு, மாத்தறை ஆகிய மாவட்டக் கிளைகளின் ஊடாக மேலும் விஸ்த்தரிக்கப்படவுள்ளன. இதற்குத் தேவையான பயிற்சிகள், உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.  இதற்கு இலங்கை உயிர்பாதுகாப்பு சங்கத்தின் உதவி பெறப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதி செயலாளர் நாயகம் சுதத் மடுகொல்ல, கம்பஹா மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் அன்டன் விக்டோரியா, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த  செயற்றிட்ட இணைப்பாளர் கெட்டி குர்சியா உட்பட சங்கத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .