2025 ஜூன் 25, புதன்கிழமை

இம்மாத "பாடிப்பறை"யில் கூத்துப்பாடல்களில் உள்ள கவிதைக் கூறுகள்

A.P.Mathan   / 2012 ஜனவரி 02 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழர் தம் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான கூத்துக்கலை இன்றளவும் நலிவடைந்த நிலையிலேயே இருந்து வருகின்றது. ஆனாலும் தற்போது, அது சார்ந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் குறிப்பாக இளைய சந்ததியினர் மத்தியிலும் பரவிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. ஓர் இனத்தின் செழுமைமிக்க வரலாற்றுச் சிறப்பிற்கு உறுதுணையாகவும் எடுத்துக் காட்டாகவும் இருப்பவை அதன் பாரம்பரியக் கலைகளே. அந்தவகையில் ஈழத் தமிழர்களின் நாட்டார் கலைகளில் கூத்து முதன்னிலை பெற்றுத் திகழ்கின்றது. உழைக்கும் மக்களின் கலையான கூத்து, இலங்கைக்குள்ளே கூர்ப்படைந்து பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்து கொண்டிருப்பதை நாம் அறிய முடிகின்றது. மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடைபெறும் கூத்துக்கள் தமக்குள்ளே பால்வகைமைத் தன்மை பூண்டவைகளாக இருப்பது, ஈழத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளின் பெருக்கத்தை உலகினுக்கு எடுத்து இயம்புகின்றது.

உழைத்துக் களைத்த மனங்களை இன்புறச் செய்கின்ற கூத்துப் பாடல்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. அவற்றில் காதல் இருக்கும், வீரம் இருக்கும், சிருங்காரம் இருக்கும், நையாண்டி இருக்கும், மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சீர்திருத்த கருத்துகளும் வீற்றிருக்கும். இசையோடு இணைந்து உலாவுகிற கூத்துப் பாடல்கள், தமிழர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்று இருந்தன. அவற்றில் உள்ள கவிதைக்கூறுகள் பாட்டாளி மக்களும் ரசித்து மகிழக்கூடியதாக அமைந்திருக்கின்றன. கூத்து ரசிகர்கள், அப்பாடல்களை அடிக்கடி முணு முணுத்துகொண்டு இருப்பதற்குக் காரணம், அவற்றிடையே பின்னிப் பிணைந்திருக்கும் இசையும் கவிதைக் கூறுகளும் என்று கூறின் அது மிகை இல்லை.

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முழுமதி (போயா) விடுமுறை தினம் அன்றும் "பாடிப்பறை" என்றழைக்கப்படும் இலக்கிய நிகழ்வை நடாத்தி வருகின்றது. இந்நிகழ்வில் முக்கியமாக கவிதைகள் பிறந்த சூழல், கவிதைகள் மீதான விமர்சனம், கவிஞர்கள் பற்றிய பார்வை மற்றும் சமூகத்தில் கவிதையின் தாக்கம் ஆகிய விடயப்பரப்புகள் சார்ந்த உரைகள், துறைசார் விற்பன்னர்களைக் கொண்டு ஆற்றுவிக்கப்படும். மற்றும் பாடல்கள், கவியாற்றுகைகள் ஆகியவையும் இடம்பெறும்.

அந்தவகையில் இம்மாதத்திற்கான "பாடிப்பறை" நிகழ்வானது, போயா விடுமுறையான எதிர்வரும் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வெள்ளவத்தையில் ரொக்சி திரையரங்கத்திற்கு நேர் எதிரே, காலிவீதியில் உள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள, தேசிய கலை இலக்கியப் பேரவையில் “பாடிப்பறை“ இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக அமையவிருப்பது "கூத்துப் பாடல்களில் உள்ள கவிதைக் கூறுகள்" என்ற தலைப்பிலான ஆய்வுரை ஆகும். இவ் ஆய்வு உரையை நிகழ்த்துவதற்காக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப்பிரிவுத் தலைவரான சி.ஜெயசங்கர் வருகை தரவுள்ளார்கள். ஆய்வுரையோடு இணைந்து கூத்துப் பாடல்களின் ஆற்றுகையும் இடம்பெறுவது ஜனவரி மாதப் "பாடிப்பறை"க்கான சிறப்பம்சம் ஆகும். இவ்வாற்றுகையை நிகழ்த்துவதற்காக அண்ணாவியார் சி.ஞானசேகரம், சி.விஜயேந்திரன், து.கௌரீஸ்வரன், ச.ஷறொசானி, வ.ரஜிதா, வி.வினிதா, க.துஷ்யந்தராஜ், சி.நிரோஜினி, எஸ்.சிந்து உஷா, வி.கௌரிபாலன், பு.ராஜதிலகன், மு.நிரோஷினிதேவி ஆகியோரும் கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகை தந்து, பங்கு பற்றவுள்ளனர். இவ் ஆற்றுகையோடு இணைந்த ஆய்வுரையை அடுத்து, கவிஞர் தவ சஜிதரனின் "ஒளியின் மழலைகள்" கவிதைத் தொகுப்பில் உள்ள "காலம் முந்திக் கிளர்கிற கடைசிப் பாடல்" எனும் கவிதையை வி.விமலாதித்தன் கவியாற்றுகை செய்யவுள்ளார்.

"பாடிப்பறை" கவித்துறை நிகழ்வினூடாக மக்கள் கலைகள் மீள வெளிப்படுத்தப்படுகின்றன. கவிதையும் சமூகமும் ஒன்றுசேரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .