2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல்கள் மீண்டும் குறிவைக்கப்படுகின்றன: அஸாத் சாலி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான நெருக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பன மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தெஹிவளை மற்றும் அத்திடிய பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிவாசல்கள் இந்த முறை ஒரே தடவையில் குறிவைக்கப்பட்டுள்ளன' என்று தேசிய ஜக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இதற்கு முன்னர் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட, அவமதிக்கப்பட்ட சம்பவங்களில் அந்தந்த பகுதிகளின் சில பௌத்த மதகுருமார் மற்றும் அவர்களின் ஆதரவு, ஆசீர்வாதம் என்பனவற்றோடு செயற்படும் குண்டர்களும் தான் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இந்தத் தடவை தெஹிவளை பிரதேச பள்ளிவாசல்களுக்கு பொலிஸாரே நேரடியாகச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரி பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படக் கூடாது என மக்களை மிரட்டியுள்ளார்.இதற்கு ஆதாரமாக அவரின் குரல் பதிவு சம்பந்தப்பட்டவர்களிடம் உள்ளது.

அந்தப் பள்ளிவாசல்களைப் பற்றி மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டுமானால் தற்காலிகமாகவாவது பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் என்று அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தான் தனது மேலதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கையில் ஈடபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால் வழமைபோல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முந்தியடித்துக் கொண்டு இந்த விடயத்திலும் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கியுள்ளார். இன்றைய (19.12.13) சில தமிழ் பத்திரிகைகளின் செய்திகளின் பிரகாரம் நேற்று ஜனாதிபதியை சந்தித்து ஹக்கீம் பேசினாராம்.

அப்போது ஜனாதிபதி இது பற்றி யாரும் தனக்கு எதுவும் சொல்லவில்லையே என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது குறித்து தான் ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஹக்கீமிடம் கூறினாராம். இவ்வாறு ஹக்கீம் சொன்னதாகத் தான் பத்திரிகை செய்திகள் அவரை மேற்கோள்காட்டிதான் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியை ஹக்கீம் சந்தித்துப் பேசினாரா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதைப்பற்றி எமக்கு அக்கறை இல்லை. ஆனால் ஜனாதிபதி மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்திரம், அதிருப்தி என்பனவற்றில் இருந்து அவரைக் காப்பாற்ற ஹக்கீம் முனைந்துள்ளார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது.

ஹக்கீம் ஜனாதிபதி மீதான தனது செஞ்சோற்று கடனைத் தீர்க்க முயன்றுள்ளார். அதைப்பற்றியும் எமக்கு கவலையில்லை.ஆனால் ஜனாதிபதி ஹக்கீமுக்கு சொன்ன பதில் உண்மை என்றால,; அதுதான் மிகவும் கவலைக்கும் நகைப்புக்கும் உரியதாகும்.

இவ்வளவு காலமும் பள்ளிவாசல்கள் மீது அடாவடித் தனம் புரியப்பட்டபோது பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. பள்ளிவாசல் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் இருக்க அதுவே மூல காரணமாகவும் இருந்தது என்பதை இந்த நாட்டு முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்பானவர் எப்படிப்பட்டவர் என்பதும் இந்த நாட்டு முஸ்லிம்;களுக்கு நன்கு தெரியும் அதைப்பற்றி நாம் எதுவும் கூறத் தேவையில்லை.

ஆனால் தற்போது நிலைமை வேறு. பொலிஸ் திணைக்களம் தனியான ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு அந்த அமைச்சுக்குப் பொறுப்பாக ஜனாதிபதியே இருக்கின்றார். பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. இந்த நிலையில் தான் பொலிஸார் நேரடியாகச் சென்று பள்ளிவாசல்களை மூடிவிடுமாறு அச்சுறுத்தி உள்ளனர்.

அப்படியாயின் அவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? ஜனாதிபதியின் கண்கானிப்பில் இருக்கின்ற ஒரு திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்பட்ட விதம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி கூறுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

அல்லது ஜனாதிபதிக்கு உண்மையிலேயே தெரியாமல் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் மறைகரம் ஒன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றதா? அப்படியாயின் பொலிஸாருக்கு உத்தரவுகளை வழங்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்க அந்த நபர் யார்? இதை அரசாங்கம் உடனடியாகக் கண்டு பிடித்து தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டரை கடமையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தினால் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். இந்த விடயத்தில் பாரபட்சமின்றி அரசு செயற்பட்டால் மட்டுமே முஸ்லிம்களுக்கு இந்த அரசின் மீதும் நாட்டின் தலைவர் மீதும் நம்பிக்கை ஏற்படும். இல்லையேல் அவர்களின் நியாயமான சந்தேகங்கள் நீடிக்கவே செய்யும்.

தெஹிளைப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்ற நிலையை அடுத்து அங்குள்ள ஏனைய பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகையில் 'குனூஅத்' (இக்கட்டான நேரங்களில் அதில் இருந்து மீள ஓதப்படும் விஷேட பிரார்த்தனை) ஓதுமாறு பிரதேச ஜம்மிய்யத்துல் உலமா கிளை வேண்டுகோள் விடுத்துள்ளதாக கேள்வியுற்றோம். இது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

ஆனால் தெஹிளைப் பகுதி பள்ளிவாசல்களில் மட்டும் 'குனூஅத்' ஓதுவது போதாது. இது நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.இந்த நாட்டு முஸ்லிம்களின் வாழ்வில் இயல்பு நிலை திரும்பும் வரை அது நீடிக்க வேண்டும்.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இதற்கான அறிவிப்பை தேசிய மட்டத்தில் விடுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜம்மிய்யத்துல் உலமா அதன் பெறுப்பை உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .