2025 ஜூன் 21, சனிக்கிழமை

நீர்கொழும்பு மீனவர்கள் பணிபகிஷ்கரிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு - குடாப்பாடு சிறு மீன்பிடித்துறையின் ஐக்கிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் திங்கட்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) கடலுக்குச் செல்லாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மீன்கள் நீர்கொழும்பு கொட்டுவை மைதானம்; அருகில் உள்ள மீன் விற்பனைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கும் அங்குள்ள கடற்கரையோரத்தில் கருவாட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கும் அவற்றை விற்பனை செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே, இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கொட்டுவை மைதானத்துக்கு அருகில் உள்ள மீன் விற்பனைச் சந்தையின் கடற்கரையில் ஒன்று கூடியே, இப்பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்கரைத் தெரு - குடாப்பாடு ஐக்கிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த யூட் என்ற மீனவர் தெரிவி;க்கையில்,
எமது சங்கத்தைச் சேர்ந்த 6,000க்கும் அதிகமான சிறு மீன் பிடித்துறை மீனவர்கள், கடந்த இரண்டு தினங்களாக தொழிலுக்குச் செல்லவில்லை. 3,000 படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. பல 1,000க்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலிருந்து எமது நகருக்கு மீன்கள் கொண்டு வந்து குறைந்த விலையில், கருவாட்டுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. இதனை இங்குள்ள சிந்தாத்தி கருவாட்டுச் சஙகத்தினர் கொள்வனவு செய்கின்றனர்.

இந்த சங்கத்தை ஆரம்பிப்பதற்கு நாங்களே உதவி புரிந்தோம். 10,000 ரூபாய் கடன் வழங்கினோம். ஏனைய வசதிகளைச் செய்து கொடுத்தோம். ஆனால், இந்த கருவாட்டுச் சங்கத்தினர் எமது மீன்களை கொள்வனவு செய்யாமல் பிற மாவட்டத்திலிருந்து குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்கின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு முன் நான்கு தினங்கள் கடலுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்புச் செய்தோம். இதன்போது மீன் பிடித்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன, தெற்கிலிருந்து இனிமேல் மீன் கொண்டு வரப்படமாட்டாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும், அவ்வாறு நடைபெறவில்லை.

நாங்கள் பிடிக்கும் மீன்கள் பிடிக்கப்பட்டு ஆறு மணித்தியாலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. தெற்கிலிருந்து வரும் மீன்கள் ஒரு மாதத்திற்கு மேலாக குளிரூட்டியில் வைக்கப்பட்ட பின்னரே இங்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, பிற மாவட்டங்களிலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார்.

ஆயினும், அவ்வாறு நடைபெறவில்லை. ஜனாதிபதி எமது கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தொடரும் என்றார்.

இதேவேளை, இன்றைய தினம் நீர்கொழும்பு மீனவர்களின் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் பலகத்துறை, கம்மல்துறை, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் உள்ள  சிறு மீன் பிடித்துறை மீனவர்களும் மன்னாரில் உள்ள நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை என்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .