2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மன்மோகன் சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும்: த.தே.ம.மு

Super User   / 2013 நவம்பர் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வர வேண்டும் என்றும் அதன்போது  யாழ்ப்பாணத்திற்கும் வந்து தற்போதைய நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கடிதம் பற்றிய செய்திக்கு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும்  தமிழகத்திலும்  பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தில் பொதுநலவாய மாநாடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கொழும்பிற்கு வரும் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வாருங்கள் என்று மட்டுமே கோரியதாக முதலமைச்சரது அந்தரங்க செயலாளர் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

ஆனால் கடந்த செப்டம்பர் முற பகுதியில் வட மாகாண முதலமைச்சர் 'இந்தியன் எக்ஸ்பிறஸ்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டிற்கு வரவேண்டுமென்று  கூறியிருந்தார். அத்துடன், இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலி. வடக்கு வீடழிப்பு விவகாரமானது உள்நாட்டு அரசியல் விடயம்.

எனவே அரசாங்கத்தோடு பேசியே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களோடு பேசி என்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இவ்விரு சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள செய்வதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஈடுபடுகின்றார் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர்  கடிதம் எழுதியமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதத்துடனா அல்லது கூட்டமைப்பினருக்கு தெரியாமலோ இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும், பொதுநலவாய மாநாட்டை தாம் பகிஷ்;கரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

கூட்டமைப்பின் இந்த இரட்டை அணுகுமுறையானது தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து தமது மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் இம்மாநாட்டை புறக்கணிக்கின்ற செயற்படானது இலங்கை அரசை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தி நெருக்கடி நிலைமை உருவாக்கும்.

தெற்காசிய வலயத்தின் பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா கலந்துகொள்ளாதிருக்குமாயின் இலங்கைக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவை உண்டாக்கும். இந்த  ஆபத்திலிருந்து இலங்கை அரசை காப்பாற்றவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முற்படுகின்றது. 

தமிழ் நாட்டு மக்கள் தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு வலிமையான பின்புல சக்திகளாவர். முதலமைச்சரின் இந்த கடிதம் மற்றும் இதற்கு முன்னர் கூறிய கணவன் - மனைவி பிணக்கில் தமிழ்நாடு தலையிட தேவையில்லை என்ற கருத்து ஆகியன ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து தமிழ் நாட்டு தமிழ் மக்களை அகற்றும் திட்டமிட்ட செயற்பாடாகும்.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவதற்காக தமிழ் மக்கள் வாக்களித்தனர். இருந்தும் அவர்களின் விரல்களிலுள்ள வாக்குச் செலுத்திய மை காய்வதற்கு முன்னரே தமிழ் மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த போராட்டத்தையும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டத்தையும் பலவீனப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனதும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரதும் திட்டமிட்ட இச்செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.  அத்துடன் இந்த மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்க வேண்டுமெனவும்  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் கோருவதுடன் இதனை வலியுறுத்தி தமிழக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினை வழங்கும்" என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .