2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அரசியல் காரணங்களுக்காக வட மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது: க.கமலேந்திரன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

அரசியல் காரணங்களுக்காக எமது மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது என வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'வட மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கே அதிகப்படியான விருப்பு வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.

அந்த ஆணைக்கே மத்திய அரசில் அந்தஸ்துள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், இந்த மாகாணத்துக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இதுதான் நிலைமை.

இப்போது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால், இதுவரை வடமாகாண ஆளுநர் வகித்த மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவுக்கான இணைத்தலைமைப் பதவியானது இனி முதலமைச்சருக்கே இருக்கும்.

முதலமைச்சரை அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி நியமித்து அதற்கான உத்தியோகபூர்வ கடிதமும் அனுப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள் யாவும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே எமது வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருக்கு இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்து தெரிவிப்பதோடு மஹிந்த சிந்தனையை பயன்படுத்தி எமது மாகாணத்தை அபிவிருத்தியாலும், மீள் கட்டுமானத்தாலும் தூக்கி நிறுத்தவேண்டிய யதார்த்தத்தை முதலமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகின்றேன்.

ஆனால் கூட்டமைப்பினர் முதலமைச்சரை நடைமுறைச் சாத்தியமான பாதையில் செயல்படுவதற்கு விடுவார்களோ? தெரியாது. நிலைமையைப் புரிந்து கொண்டு அரசியல் காரணங்களுக்காக எமது மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாலுமே டக்ளஸ் தேவானந்தா அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் என்ற ரீதியில் கூட்டங்களை நடத்தினார். உரிய அதிகாரிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கினார்கள்.

ஏற்கனவே நாம் கூறியதுபோல் பிரதேச சபைகளும், மாகாண சபையும் செயற்படுவதற்கு முன்னமே நாம் அபிவிருத்திப் பணிகளை எமக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தின் துணையோடு செய்யத் தொடங்கியவர்கள்.

எமக்கு மக்கள் ஆதரவு வழங்க முன்வந்ததையும், எமது அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுப் பணிகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டதையும் கண்டு, அஞ்சியே எமக்கு எதிராக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

மக்களிடம் தேர்தல் காலங்களில் ஆணைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு, பின்னர் ஆணை வழங்கிய மக்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டு அடுத்த தேர்தல்வரை ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்து வீரப்பேச்சுக்கள் பேசுவார்கள். அபிவிருத்தி தேவையில்லை என்று ஆவேசம் பேசிய நீங்களும் உங்கள் தலைவர்களும் இப்போது வழமைபோல் வாக்குறுதியை மறந்துவிட்டீர்களோ தெரியவில்லை.

தனது தோளிலே அரிசி மூடை சுமந்து அகதியாக நின்ற எமது மக்களுக்கு உணவளிக்க பாடுபட்ட எமது தலைவரைப் பார்த்து ஆணை பற்றியும், மக்கள் ஆணையை இழந்தவர் என்றும் கேள்வி எழுப்புவதற்கு நேற்று அரசியலுக்கு வந்த எந்தப் பிரகிருதிக்கும் அருகதை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் குறப்பிடப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .