2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உணர்ச்சிகளை நிறுத்த முற்பட்டால் தாக்கம் மிகமோசமானதாக இருக்கும்: சி.வி

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

எமது மக்களின் உணர்சிகளை  இராணுவப்பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ நிறுத்த முற்பட்டால் இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஒரு பரம்பரை எம்மை விட்டுப் போனதையும் புதிய பரம்பரை வருவதைக் கட்டுவதற்குமே நாங்கள் மரங்களை நடுகை செய்கின்றோம். மரங்கள் நடுவதன் மூலம் சுற்றுச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்படும் அதனைப் போலவே எங்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட ஒரு அங்கமாக இந்த மரங்களை நாங்கள் நடுகின்றோம் என்றார்.

எமது இனத்தின் பல இளைஞர் யுவதிகள் எங்களை விட்டுப்போய் விட்டார்கள் இதனால் எமது இளைஞர் சமுதாயத்தில் ஒரு மேம்பாடு வரவேண்டும் இதனை எடுத்துக்காட்டும் முகமாக இந்த மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஏ-9 வீதியில் இருந்த அத்தனை மரங்களும் போய்விட்டது நல்ல காடுகளாய் இருந்த இடமெல்லாம் வெறும் தரைகளாக மாறிவிட்டது. எது எங்கே போனது? எப்படி போனது? யார் கொண்டு போனது? நான் நினைக்கின்றேன் ஒரு சர்வதேச விசாரணை நடத்தினால் அது தெரியவரும்.

 இவற்றுக்காக எங்கள் பிரதேசங்களில் புதிய மரங்களின் தேவைப்பாடுகள்  இருக்கிறது அந்த மரங்களை நாங்கள் திரும்பவும் வரவழைக்க வேண்டும்  வளரவிடவேண்டும் அதே போன்று தான் எங்கள் வாழ்விலும் புதிய சமுதாயம் மேம்படவேண்டும் என்றார்.

எங்கள் காணிகளிலோ தனிநபர்களின் காணிகளிலோ மரங்கள் நடுகை செய்வதை எந்த அரசாங்கத்தினாலேயோ தடைசெய்ய முடியாது இன்று நாங்கள் பல இடங்களில் மரங்களை நடுகை செய்திருக்கின்றோம் எனது வீட்டிலும் இன்று நான் ஒரு மரததை நட்டிருக்கின்றேன். இது எங்கள் மனத்தைப் பொறுத்தது உணர்ச்சிகளைப் பொறுத்தது என்றார்.

இறந்த ஆத்மாக்களின் அத்மா சாந்திக்காகவும் புதிய உலகிற்கு எங்களை கொண்டு செல்லவும் ஒரு அடையாளமாக இந்த மரநடுகை அமைந்துள்ளது. இதனை செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது   இதனை அரசாங்கம்  குறுகிய நோக்கத்துடனேயே பார்க்கிறது.

ஒரு நீர்த் தொட்டிக்குள் ஒரு பந்தை அமுக்கும் போது அது எவ்வாறு எழுச்சி பெறுகின்றதோ அதனைப் போலவே மக்களின் உணர்ச்சிகளும் இருக்கும் எமது மக்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை  செய்ய விடாமல் இராணுவத்தின் ஊடாக பலாத்காரத்தின் ஊடாக அல்லது வன்முறையூடாக தடுத்தால்  இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் என்பதை  அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 28 November 2013 08:09 AM

    உண்மையில் நல்ல கருத்து. இப்படி தைரியமாகத்தான் எமது உண்மையான மு கா வின் தந்தை தலைவர் அஸ்ரப் பேசுவார். அவர் பாணியில் நீங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .