2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமெரிக்கா சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது: சி.கா.செந்தில்வேல்

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் நகல் அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தனது ஏகாதிபத்திய உள்நோக்க சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சீச லெனினிச கட்சியின் தலைவர் சி.கா.செந்தில்வேல் புதன்கிழமை (12) தெரிவித்தார்.

புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக்கட்சியின் யாழ்.பணிமனையில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான அரசியல் கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'அமெரிக்கா மேற்குலக விசுவாசிகளான தமிழர் தரப்புக் கட்சித் தலைமைகள் ஜெனிவாத் தீர்மானம் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதோ வரப்பிரசாதம் வரப்போவதாகப் பொய்ப் பிரசாரங்களைச் செய்து வந்தன. இப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கவலையும் ஒப்பாரிகளும் வைக்கிறார்கள்.

இது அவர்களது தூர நோக்கற்ற குறுகிய அரசியலினதும் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்ளாத வெள்ளைத் தோல் விசுவாசத்தினதும் வெளிப்பாடேயாகும். ஓநாய் தனக்காக அழுகிறதா? அல்லது  ஆடு நனைவதற்காக அழுகிறதா என்பதை விளங்கிக் கொள்ளாத தமிழர் தரப்புத் தலைமைகளின் அந்நிய விசுவாச அரசியல் வெளிப்பாட்டையே இன்று காண முடிகிறது.

கடந்த நூற்றாண்டு முதல் இன்று வரை தமிழ்த் தரப்புத் தலைமைகள்  வெள்ளைக் காலனித்துவ வாதிகளுக்கும் பின் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளுக்கும் விசுவாசிகளாகவும் சேவை புரிபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் காட்டிய பணிவான விசுவாசத்திற்கு அவர்கள் இதுவரை எத்தகைய அரசியல் பிரதிபலன்களையும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. பிரித்தானியர்களும் பின்பு அமெரிக்கர்களும், சிங்கள பௌத்த பேரினவாத மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தினர் பக்கத்திலேயே இருந்து வந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளும் முழு இலங்கையையும் தமது உலக மேலாதிக்கத்திற்கான பிடிக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

அதற்கு ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சி முழு இணக்கத்தை கொடுக்க மறுத்து நிற்பதனாலேயே அவர்களை வழிக்குக் கொண்டுவந்து அவ் ஆட்சியை அகற்றித் தமக்குரிய ஆட்சியைத் தெற்கில்  கொண்டுவரவே ஜெனிவாவில் இருந்து கயிறுகள் எறியப்பட்டு வருகின்றன.

அதனையே ஜெனிவாத் தீர்மானத்தில் 26வது 27வது அமர்வுகளிலும்; இலங்கை பற்றி விவாதிக்கப்படுவதற்கு  நகல் தீர்மானத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. 

இத்தகைய அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் தமிழ்த்தலைமைகள் தமிழர்களின் மீட்பர்களாகக் காட்டுவது முழுத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாக உள்ளது. காலத்திற்குக் காலம் சென்னையையும், புதுடெல்லியையும், வாஷpங்டனையும், லண்டனையும் தமிழ்மக்களுக்குக் காட்டி அதோ அழுத்தம் வருகிறது, இதோ பொறிமுறை வருகிறது, சர்வதேசம் உற்று அவதானிக்கிறது சர்வதேச விசாரணை வரப்போகிறது, எனத் தமிழர் தரப்புக்கட்சிகள் கூறிவருவது அரசியல் ஏமாற்றுக்களேயாகும்.

இத்தகைய அரசியல் பொய்மைகளையும் அரசியல் மூட நம்பிக்கைகளையும் தமிழ் மக்கள் குறிப்பாகத் தமிழ் இளம் தலைமுறையினைப் நிராகரித்து தூர நோக்கிலான தெளிவுள்ள மக்களுக்கான அரசியல் பாதையில் பயணிக்க முன்வர வேண்டும்.

இல்லாதுவிடின் தொடர்ந்தும் மக்கள் ஏமாற்றங்களையும் இழப்புக்களையும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .