2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கந்தப்பசேகர வீதி அகலமாக்குவதில் இழுபறி

Menaka Mookandi   / 2014 மார்ச் 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்.கந்தப்பசேகர வீதியினை அகலமாக்குவதற்கு அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் வடிகாலமைப்பு பெரும் இடையூறாக இருப்பதுடன், இது தொடர்பில் அப்பகுதி வர்த்தகர்கள் இணைந்து ஒரு உடன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் குறித்த வீதி அகலமாக்கப்படும் என்று யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ். ஆஸ்பத்திரி வீதிக்குச் சமாந்தரமாக தெற்குப் பகுதியில் இருக்கும் மேற்படி வீதியினை அகலமாக்கினால், யாழ். ஆஸ்பத்திரி வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக வாகனங்கள் தரித்து நிற்பது குறைக்கப்பட்டு ஆஸ்பத்திரி வீதியில் வாகன நெரிசலினைக் குறைக்க முடியும் என்ற நோக்குடன் கந்தப்பசேகர வீதியினை அகலமாக்குவதற்கு யாழ். மாநகரசபை தீர்மானித்திருந்தது.

இதற்காக அவ்வீதியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்களுடன் கலந்துரையாடி வீதி அகலமாக்குவதற்கு தேவையான விஸ்தீரணத்தின் அளவு பற்றியும் அதற்காக வர்த்தகர்களின் காணிகளிலிருந்து எவ்வளவு அளவான காணி சுவீகரிக்கப்படும் என்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த வீதியினை அகலமாக்குதில் தொடர்பில் நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு யாழ். மாநகர சபை முதல்வர் நேரடியாகச் சென்று அப்பகுதி வர்த்தகர்களுடன் இன்று (12) கலந்துரையாடினார்.

இதன்போது, இவ்வீதியினை அகலமாக்குவதற்கு முன்பாக, குறித்த பகுதியிலுள்ள கழிவுநீர் வடிகாலமைப்பு புனரமைப்புச் செய்யவேண்டிய தேவையுள்ளதாகவும், இருந்தும், குறித்த கழிவுநீர் வாய்க்கால் அவ்விடத்திலுள்ள விருந்தினர் விடுதி வளாகத்தினூடாகச் செல்வதினால் அதனைத் துப்பரவு செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாக மாநகர சபை திட்டமிடல் பகுதியினர் தெரிவித்தனர்.

அதிலும் குறிப்பாக விருந்தினர் விடுதி வளாகத்தினூடாகச் செல்லும் வாய்க்காலின் மேற்பகுதி கொங்கிறீட் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதால் மாநகர சபை ஊழியர்களினால் துப்பரவு செய்ய முடிவதில்லையென சுட்டிக்காட்டினார்கள்.

இருந்தும், விருந்தினர் விடுதி நிர்வாகத்தினர், இந்த வாய்க்காலுக்கு மேலாக போடப்பட்டுள்ள கொங்கிறீட் ஆனது யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் 2004ஆம் ஆண்டு போடப்பட்டதாகவும், அதற்கான நிதியுதவியினை தாங்கள் செய்ததாகவும், மற்றய நிர்மாணப் பணிகளை மாநாகர சபை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்துக்கள் தொடர்பில் பதிலளித்த மாநகர முதல்வர், யாழ்.மாநகர சபையின் வீதி அதிகார பகுதியின் திட்டத்தின்படி குறித்த வீதியிலிருந்து புல்லுக்குளத்திற்குச் செல்லும் கழிவுநீர் வாய்க்கால் குளத்தின் உயரத்திற்கு ஏற்ப சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

அத்துடன், குறித்த விருந்தினர் விடுதி நிர்வாகத்தினர் தெரிவிக்கும் மாநகர சபை அனுமதியுடன்  கொங்கிறீட் இட்டு மூடப்பட்ட வாய்க்காலின் பகுதி பற்றிய விடயம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், மாநகர சபை ஊழியர்கள் எவ்வித இடையூறுமின்றி கழிவுநீர் வாய்க்காலினைத் துப்பரவு செய்ய குறித்த விருந்தினர் விடுதி நிர்வாகத்தினர் ஒரு உடன்பாட்டிற்கு முன்வரவேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .