2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

குப்பைகளை ரயில் மூலம் கொண்டுவந்து கொட்ட வேண்டாமென ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில் மூலம் கொண்டுவந்து, புத்தளம் அருவக்காட்டுப் பகுதியில் கொட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், புத்தளம் நகரில், இன்று வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன், புத்தளம் இளைஞர் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சர்வ மதத் தலைவர்கள், உலமாக்கள், கல்வி மான்கள், சகல கட்சிகளையும் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் எனப் பெருந்திரளதனோர் கலந்துகொண்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது புத்தளம் நகரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், ஆங்காங்கே பொலிஸாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர், பள்ளிவாசலின் முன்றலில் இருந்து ஆரம்பித்த பேரணி, புத்தளம் நகர சுற்றுவட்டம் ஊடாக பிரதான பஸ் நிலையம் வரை சென்றடைந்தது, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

'நல்லாட்சி அரசே கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டாதே', 'தூய்மையான புத்தளத்தை மாசுபடுத்தாதே', 'புத்தளத்தின் உப்பு வளத்தை குப்பையிலிருந்து பாதுகாப்போம்', 'கொழும்பு குப்பைக்கு புத்தளம் தொட்டியா' இதுபோன்ற தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் கடுமையான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதேவேளை இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு கோரி புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு, புத்தளம், முந்தல், கற்பிட்டி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரொன்றும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறு புத்தளம் சர்வ மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தலைமையிலான குழுவொன்றினால், மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது குறித்த மகஜரைப் பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் எச்.எம்.சித்ரானந்த, உடனடியாக இதனை ஜனாதிபதிக்கு கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X