2025 மே 05, திங்கட்கிழமை

தும்புத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்திலுள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை மற்றும் கனமூலை ஆகிய பிரதேசங்களில் காலாகாலமாகத் தும்புத் தொழிலை மேற்கொண்டு வரும் தும்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கடையாமோட்டையில் சந்தித்து, இந்தத் தொழிலில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

'இந்தப் பிரதேசத்தில் சுமார் 120 தும்பு ஆலைகள் இருக்கின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தும்புத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் தும்பை 25 ரூபாய்க்கு விற்பனை செய்த நாம், இப்போது ஒரு கிலோகிராம் தும்பை 18 ரூபாய்க்கே விற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

'சீனக் கம்பனியொன்று, இந்தப் பிரதேசத்தில் காலூன்றி, இதே தொழிலை மேற்கொண்டு வருவதால், நாங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். அரசாங்காம் இதற்குரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்' என அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இவற்றைக் கேட்டறிந்த அமைச்சர், இது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சர்வதேச வர்த்தகம் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவீரவின் ஆலோசனையையும் பெற்றுத் தும்பு உற்பத்தியாளர்களினதும், தும்புத் தொழிளாலர்களினதும் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X